மெல்லத் தமிழ் இனிச் சாகுமேன்பதை...

தரையைத தொட்டது விமானம்
ஒளிரும் மின்விளக்குகளின்
அணிவகுப்பு…
உழுத தோட்டத்து
காக்கைகளும் கொக்குகளும்
நாரைகளுமாய்…
ஆங்காங்கே விமானங்களின்
நிழற்படங்கள்…
“சென்னை விமான நிலையம்
உங்களை அன்புடன்
வரவேற்கிறது”
அழகிய தமிழில் சுலோகம்…

குளிரை விட்டு
வெளியில் வந்தேன்

!!!!!!!!!!!!!

கூவம் ஆறும் அடையாறும்
சென்னையின் சொத்து
செத்த பிணங்கூட அப்படி
நாறி நான் கண்டதில்லை…

பிச்சைக்காரர் தெருநீளம்
நிறைந்திருப்பர்….

சைக்கோவும் பைத்தியமும்
வழியோரம் படுத்துறங்கி
ஓய்வெடுப்பர்…

மேம்பாலங்கள் மேலே
பயணம் தொடரும்
கீழே பல குடும்பம்
வாழ்க்கை நடத்தும்…

குப்பைகளால் நிறைந்த
தெருக்கள்…

நடைபாதையெல்லாம்
மலிந்த கடைகள்…

விதிகளை
மீறிய வாகனங்கள்
சென்னையின்
அடையாளங்கள்…

வீதிகள் தோறும்
சேரிகளின் அணிவகுப்பு
தெருவோரம் பூக்கடைகள்
மலிந்திருக்கும்…

கழிவுநீர் கால்வாய்கள்
வாய்திறந்து விரிந்திருக்கும்
ஒண்டுக்கும் ரண்டுக்கும்
வீதியெல்லாம் இலவசமாய்
விளம்பரங்கள்…
பேருந்தில் நிறைந்த கூட்டம்
பழஞ்சோற்றில் இலையானாய்…

கட்சித் தலைவர்களை
தூக்கிச் சுமக்கும் மதில்கள்…
வீதிகள் எல்லாம்
பிரச்சார முழக்கம்
கட்டவுட்டும் விளம்பரமும்
கண்கொள்ளாக் காட்சி…

திரையரங்கு தோறும்
காதலர்கள் கூட்டம்
மெரினாவும்
பெசன்ட் நகரும்
விழிபிதுங்கும்
காதலரைப் பார்த்து…

‘இடம்’ என்றால் ‘லெப்ற்று’
‘வலம்’என்றால் ‘றைற்று’
‘நேர்’ என்றால் ‘ஸ்ரைட்டு;
‘திரும்பு’ என்றால் ‘கட்டு’
தமிழோ
தவிக்குது
இவர்கள் கையில் பட்டு….

பாரதி பிறந்த மண்
பழந்தமிழ் வளர்த்த மண்
வேர் கொண்டு தமிழ்
விழுது விட்டு செழித்தமண்

சங்கம் வளர்த்த தமிழ்
மன்னர்கள் வாழ்ந்த மண்
தமிழுக்கு பங்கம்தான்
செய்வது முறையாமோ…?

மெல்லத் தமிழினிச்
சாகுமென்பதை
சென்னை எனக்கு
உணர்த்தி நின்றது…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி