3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவிலான பிரபந்தங்கள் தோன்றுவதற்குச் சாதகமாக அமைந்த காரணிகள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் என்றுமில்லாதவாறு, ஈழத்தில் அதிகப்படியான பிரபந்த இலக்கியங்கள் தோன்றின. தமிழகத்தில் விஜயநகர நாயக்கர் காலம் நிலவிய அதேகாலத்தில் ஈழத்தை போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆட்சி புரிந்து வந்தனர். சமகாலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்றின. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்ற பல்வேறு காரணிகள் தூண்டுதலாக அமைந்தன.

(அ) போத்துக்கேயர் – ஒல்லாந்தர் கால அரசியல் நிலையானது முன்னைய ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தமையினால் மக்களின் சமூக வாழ்வியலும் தவிர்க்க முடியாதபடி மாறியது அல்லது மாற்றியமைக்கப்பட்டது. போத்துக்கேயர் 1621இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்னரேயே யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதம் ஓரளவு பரவத் தொடங்கியிருந்தது. 1542ஆம் ஆண்டு 600 பேர் மன்னாரில் கிறிஸ்த்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டதை அறிந்த சங்கிலி மன்னன் படையுடன் மன்னார் சென்று மதகுருவையும் மதம் மாறியோரையும் கொலை செய்தான்.(4)

இதன் விளைவாகச் சைவ-கிறிஸ்தவ முரண்பாடு உச்ச நிலைக்குச் சென்று பின் அது யாழ்ப்பாணத்தையே போத்துக்கேயர் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. போத்துக்கேயரின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்பானது சமய-சமூக ரீதியில் பெருந் தாக்கத்தினை உண்டுபண்ணியது. சைவ வழிபாட்டு மரபுகள், சடங்காசாரங்கள் என்பன அந்நியரால் தடுக்கப்பட்டன. இதனால் சைவ விசுவாசிகளிடம் தம் சமயத்தையும் தலங்களையும் அந்நியரிடம் விடக்கூடாது என்ற எண்ணம் தலைதூக்க அவை சிறுசிறு புகழ்ச்சிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் தோற்றங் கண்டன.

(ஆ) யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத்தில் சிறந்த பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்கள் தமிழையும் சைவத்தையும் சிறப்புடன் ஆதரித்து வளர்த்தனர். அதனால் அக்காலப் புலவர்கள் மன்னரையும் புகழ்ந்து பாடினர். மன்னர்கள் புலவர்களாக இருந்தும் தமிழை வளர்த்தனர். ஆனால் போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அந்நிய நாட்டினர் ஆட்சி புரிந்தமையினால் அது தமிழ்ப் புலவர்களின் மனநிலையில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ண, அவர்கள் கடவுளைப் பாட முற்பட்டனர். மக்களையும் பொருள்வசதி படைத்த புரவலர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டும் சிலர் பிரபந்தங்களைப் பாடினர்.

(இ) போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கைக்கு வந்த நோக்கங்களில் முக்கியமானது மதம் பரப்புதலாகும். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட கீழைத்தேச நாடுகளைக் கைப்பற்றிய இவர்கள் வர்த்தகத்தையும் மதம் பரப்புதலையும் நோக்கமாகக் கொண்டு தமது நடவடிக்கைகளைச் செவ்வனே செய்து வந்தனர். அடிநிலை மக்களை இலகுவில் மதம் மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்த அந்நியர்கள் சுதேச மொழியில் இலகு நடையில் கிறிஸ்தவமதம் சார்பான கருத்துக்களை மக்களிடம் விதைத்தனர். இதற்கென அவர்கள் தெரிவு செய்த இலக்கிய வடிவம் ‘பிரபந்தம்’ ஆகும்.

(ஈ) அந்நியர்கள் தமது மதப்பிரச்சாரத்துக்காக தெரிந்தெடுத்த இலக்கிய வடிவமான பிரபந்தத்தையே சைவப் புலவர்களும் எதிர்ப் பிரச்சாரத்துக்குத் தெரிவு செய்தனர். அகத்திணை மரபில் பின்பற்றப் பட்டு வந்த காதல், தூது, போன்றவற்றை இறையியலுடன் இணைத்துப்பாடி மக்களைச் சைவ பக்தி என்ற வட்டத்துக்குள் மறுபடியும் கொண்டுவருவது இவர்களின் நோக்கமாக இருந்தமையினால் சித்திரவேலாயுதர் காதல், கிள்ளைவிடுதூது போன்ற சிற்றிலக்கியங்களைப் பாடினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி