அக்டோபர் 31, 2009

நூல் அறிமுகம்

மூன்று வருடங்களின் பின்னர் இன்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் முல்லைமணி வே .சுப்பரமணியம் ஐயாவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். அது வவுனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் நடந்தது.

மூன்று வருடங்களின் பின் ஒரு இனிமையான புத்தக வெளியீட்டு விழா. அதுவும் ஒரே மேடையில் நான்கு புத்தகங்கள் வெளியிடும் மற்றும் அறிமுகப் படுத்தும் அரிய காட்சி.

வெளியீடு - மித்ர வெளியீடு

சங்கானைச் சண்டியன் , மக்கள்...மக்களால்...மக்களுக்காக... , யாவும் கற்பனை அல்ல - இவை மூன்றும் டென்மார்க்கில் வசித்துவரும் வி.ஜீவகுமாரன் எழுதியவை.

மகாவம்ச என்ற நூலைத் தமிழில் எஸ் .பொ. எழுதியிருந்தார்.

வெளியீட்டு நிகழ்வு நடந்த இடம் - அண்ணா சிற்றரங்கம் , கன்னிமரா நூல் நிலையம் , சென்னை.
நேரம் - மாலை நான்கு மணிக்கு மேல். (31.10.2009)

தலைமை - பேராசிரியர் ஔவை நடராசன்

ஆசியுரைகள் - இரா . நல்லகண்ணு, இந்திரா பார்த்தசாரதி, வி.சி.குகநாதன்

தொகுப்பாளர் - அப்துல் ஜாபர்

வெளியிட்டவர்கள் - தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் . த.செயராமன்

அறிமுகவுரையளர்கள் - வீ.ந.சோ. , முனைவர் .திருப்பூர் கிருஸ்ணன்

பெற்றுக்கொண்டவர்கள் -இயக்குனர். பாலு மகேந்திரா, கலைமாமணி வீ.கே.டி.பாலன்,நடிகர்.இயக்குனர்.மணிவண்ணன்,முனைவர் பா.இரவிக்குமார்

ஏற்புரை - எஸ்.பொ மற்றும் வி.ஜீவகுமாரன்.

நன்றியுரை - முனைவர் பா.இரவிக்குமார்











அக்டோபர் 30, 2009

சமாந்தரக் கோடுகள்

வெட்டிப் போட்ட
என் தோட்டத்து
வேலிக் கதிகாலாய்
முளைத்துவிட ஆசை கொண்டேன்.

வெட்டி எறிந்த நகமென
உமிழ்ந்து துப்பினர் ஒருசிலர்.

சுவரில் எறிந்த பந்தாகி
மீண்டும்
அவரிடமே மீண்டன
அவர் தம் சுடுசொற்கள்.

கட்டையில் கட்டிய மாடாகி
உன் கொல்லையில்
முன்னர் வட்டமிட்ட
என்வலி புரிய
நியாயமில்லைத்தானே உனக்கு.

கணக்காளன் வீட்டுக்
கணிணி விசைப் பலகையின்
இலக்கங்கள் போல
செத்துக் கொண்டிருக்கிறேன்
நானிங்கு.

நீயோ !

முள்ளுக் கரண்டியில்
இறைச்சி ஊட்டி
"பீட்ஸா" கடித்து
"பியர்" குடித்து
மகிழ்ந்துகொண்டிருப்பாய்
இந்நேரம்.........


அக்டோபர் 27, 2009

இரவல் உடை (அல்லது) எழுத்தாளனின் வறுமை


கிடைக்கிறது சிறு பரிசு மேடையிலே
போகவேணும் வேளைக்கு
திருப்பிக் கொடுக்க...

அக்டோபர் 24, 2009

ஆறாந்திணை


பனியும் பனி சார்ந்த இடமும்

(குறிப்பு :- முன்னர் ஐந்து நிலங்கள் பற்றி எழுதியுள்ளேன்.
அவை அன்பின் ஐந்திணை பற்றிய புதிய பார்வை. ஆனால் இது ஆறாந்திணை இதற்கு பொருத்தமான (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பதைப்போல்) ஒரு மரத்தின் பெயரை வைப்பீர்களா? எனக்கு புலம் பற்றிய அனுபவம் கிடையாது அதனால்தான் )



மேலை நாடெங்கும்

ஈழத்தின்

ஏழைப் புத்திரர்கள்

உழைத்துழைத்து

வரி கட்டிவளம் பெருக்கி;

வாழ எண்ணித்

திசை நகர்ந்து

சமுத்திரத்து மீன்களாக

சகதியிலேமாட்டி மாட்டி

யாசித்துக் கிடக்கின்றார்.


*** *** ***


தன் தேசம் அங்கே

தீப்பற்றி எரிகையிலே

மக்களங்கே

தெருத் தெருவாய் அலைகையிலே

வாயில் நுழைய மறுக்கும்

ஓர் மேலை நாட்டில்

ஓர் வீட்டில்,

இன்றைய துயர்ச் செய்தியை

தொலைக்காடசி பார்த்தோ

அன்றி;

யாதொன்றில் கேட்டோ

மனம் சோர்ந்து

தூங்கிப் பின்கண் விழிப்பான்.


*** *** ***


காலத்தின் சதியினாலே

அவனுமோர்அகதிதான்.

நகர் நகராய்நாடு நாடாய்

விட்டலையும்

ஈழத்து அகதியவன்.

இணைபிரிந்த

தனியாடு.


*** *** ***


ஊரில் உறவுகள்

நிலை அறிவான்

தீ எரியும் தேசமாக

துயர் பெருகும்

உறவுகளின்கதை அறிவான்.

நாளை துயர் முட்டி

வந்த திசைச்சுவடு தெரியாமல்

மடிந்தும் போகலாம்.

கடல் வந்து அலை மோதி

மணல் மூடித் திட்டாகி

சிறு நண்டுப்படம் போல

சிலவேளைஅவர் வாழ்வு

மறைந்தும் போகலாம்.


*** *** ***


வாழ்க்கை சீவியமாகி...

போராட்டமாய் இன்னும்

தொடர்கிறது நாட்கள்...


ஆனால்?


பின்னொரு நாளில்

அகதித் தேசத்து

அடிமைகள் அனைவரும்

முடிவிலாப் பெருவெளி கடந்து

நாடு மீள்கையில்...

அவலம் மட்டுமே

பேசித் துயருறும்

அந்தர நிலைக்குள்ளும்

தள்ளப் படலாம்.


*** *** ***


பிணங்களால் நிறைந்து

இரத்தத்தில்குளித்து

இன்னும் நிறம் மாறி

வெண்மணல்சிவக்கிறது.

வயிறொட்டும் பட்டினியும்

உடலுருக்கும்நோயும் வந்து

உயிரறுக்கும்.

கந்தகப் புகையாலே எழுதப்பட்ட

தினச் சாவுக் குறிப்புக்கள்

இல்லாமல் என் ஊர்

என் நகரம்

என் நாடு

இனிஎன்று மீளும்???



அக்டோபர் 22, 2009

முற்றுப்பெறாத சீவியம்.





















கொட்டித்
தீர்க்கப்படும்
வன்மங்களிடையே மெல்ல மெல்ல
புதைந்து கொண்டிருக்கிறது
என் ஆன்மா.

இறுதிவரை வாழவைப்போம்
நன்றாக என்று
கைப்பிடித்தவர்கள்
இடைநடுவே
காணாமல் போனபின்னர்
எப்படியாயினும்
வாழப் பழகிக் கொண்டு
தொடர்கிறது என்
முற்றுப்பெறாத சீவியம்.

அக்டோபர் 18, 2009

எங்கள் சாம்பல் மேட்டில்...



காட்டுமிராண்டித்தனமாகவும்

நயவஞ்சகமாகவும்

எம் முன்னோர்கள்

தோற்கடிக்கப்பட்ட

எங்கள் மண்ணில்,

கனவான்களாகவும்

கடவுளர்களாகவும்

எங்களில் தம்மைத் திணித்தபடி

இன்னும் எங்கள்மேல்

தம்வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப்

புறப்பட்டுக் கொண்டிருக்கிறது

ஒரு கூட்டம்.


மீட்பர்கள் என்று

தம்மை அழைத்தபடி

தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப்

பாணங்கள் ஏவி

எம்மைச் சூழ்ந்து கொண்டனர்.


தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம்

இல்லையேல் அரக்கர் நாமம்

காலங் கடந்தும்

இதுவே தொடர்கதையாய்

நீண்டு கொண்டிருந்தது.

மறைந்திருந்து பாணங்கள்

ஏவுவதில் வல்லவர்கள்

மீண்டும் நாவாய்கள் ஓட்டிப்

புதர்களைக் கடந்து

கரையைத் தொட்டனர்.


அம்புகள் வீழ்ந்து மீண்டும்

ஆயிரம் துளைகள் போட்டன.

நஞ்சு தடவிய பாணங்கள் நடுவில்

பிஞ்சுகள் கூட வெந்து வதங்கினர்.


உமது பாணத்தின் நுதியல்

தர்மம் குடியிருப்பதால்

பாராமுகமாய் உலகம் இருக்குமா?

உங்கள் தர்மம், நீதி, அகிம்சையென்ற

பசப்பு வார்த்தைகள்

வரும் நாளில் காற்றில் பறக்கலாம்.

தன்நெஞ்சே தன்னைச் சுட்டு

நீவீர்

செத்தும் போகலாம்.


அன்றி,


காலங் கடக்கும் பின்னொரு நாளில்

உங்கள் பாதங் கழுவி

திருவடி தொழுதோரை

அரக்கர் என்ற அவப் பெயர் நீக்கி

அரியணை ஏற்றி ஆட்சியில் அமர்த்தலாம்.

அவர் காலந்தோறும் வாயில் காத்து

நன்றியுடன் உம் காலடி கிடக்கலாம்.


ஆனால்!!!


எங்கள் சாம்பல் மேட்டில்

எருக்கலைகள் பூக்காது.

ஒரு இனத்தின் சாபம்,

அவர்தம் வேட்கை

காலங்கடந்தும்

இன்னும் நீளும்

வலிமையாக....

அக்டோபர் 17, 2009

குருதியின் விம்பங்கள்

சிவப்பு ஒற்றை ரோஜாவை

பார்க்கும் போதெல்லாம்

என்னிடம் காதல் வரவில்லை

என் அன்புத் தோழியே


















என்னினம்



சிந்திய குருதியின்



விம்பங்கள்பட்டுத் தெறிக்கும்



இதை இனிமேல்



காதல் சின்னம் என்று

சொல்லாதீர்கள்

அக்டோபர் 10, 2009

வந்துட்டன் .....

எல்லோருக்கும் எனது இனிய வணக்கம்,
நான் திருப்பியும் வந்துட்டன்
என்னதான் இருந்தாலும் இரண்டு வாரங்கள் எழுதாமல் இருந்தது கவலைதான்.
புது வீடு
புது வலை இணைப்பு
கலக்கலாம் தானே .............................................

நட்புடன்
-தியா-