ஜூலை 28, 2020

அழகிய ஐரோப்பா - 7

அழகோ அழகு


மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது. 

சிறு நடைப்பயணத்தின் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது.  

இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்கு பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம். 

கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை பாதை இருந்தது.
 

மற்றவர்களை பின்தொடர்ந்து நாமும் நடந்தோம். கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் தூரம் போனதும் பிரமிக்க வைக்கும் அழகுடனும் மிடுக்குடனும் எம்முன்னே தோன்றியது பக்கிங்காம் அரண்மனை.


உலகம் முழுவதையும் தன் கைப் பிடிக்குள் வைத்திருந்த பெரும் சாம்ராச்சியம் என் கண் முன்னே விரிந்து கிடந்தது.  உலகின் வயதான ராணி வாழும் அரண்மனை முன் நிற்கிறோம் என்ற பெருமை எனக்குள்…

என்னதான் மாளிகை முன் நின்றாலும் அந்த மாளிகையின் மூடிய கம்பி கதவு வழியாகத்தான் அந்த மாளிகையின் வெளித்தோற்றத்தைக் காண முடியும். உள்ளே செல்ல முடியாது.

வெளியே நின்ற மக்கள் தங்கள் போன்களிலும் கேமரா விலும் படங்களை எடுத்துக்கொண்திருந்தனர். நாங்களும் விரும்பிய கோணங்களில் நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம்.
மாளிகையின் எதிரே நறுமணம் வீசும் வண்ண மலர்த் தோட்டமும் அழகிய நீரூற்றும் பார்ப்பதற்கு மிகவும் அம்சமாக அமைந்துள்ளன... வண்ண மலர்களின் மகரந்த வாசம் எங்கும் நிறைந்து எங்கள் இதயத்திலும் அப்பிக்கொண்டது.


மாளிகையின் எதிரே விக்டோரியா ராணியின் ஒரு நினைவாலயம் உள்ளது. அதில் விக்டோரியா ராணியின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும் வெற்றி தேவதையின் பொன்நிறத்திலான சிலை ஒன்று  உயரத்தில் வைக்கப்பட்டு உள்ளது. 



அதன் கீழேயே மஹாராணி விக்டோரியா அரியாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஒரு வெண்ணிறச் சிலை. 


இந்த நினைவாலயத்தின் நான்கு புறங்களிலும் வெண்கலத்தினால் ஆன  சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் நான்கு ரோமானிய வீரர்களின் சிலைகள்.


பக்கிங்காம் அரண்மனை ராணியின் அதிகாரபூர்வ மாளிகையாக இருந்தாலும்  இந்த மாளிகையில் ராணி அதிகம் வசிப்பதில்லை. பக்கிங்காம் அரண்மனையில் ராணி இருந்தால் அந்த மாளிகையின் மேற்கூரையில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடி பறக்கும். இன்றும் கொடி பறந்தது…

ஜூலை 25, 2020

அழகிய ஐரோப்பா - 6

பயணங்கள் முடிவதில்லை

லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். …

நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. 


எங்கள் அனைவருக்குமான ரிக்கெட் எடுத்த பின்னர் சொல்லி வைத்த மாதிரி சரியான நேரத்துக்கு கூர்  மூஞ்சி ரெயில் வந்து எங்கள் முன் நின்றது. 

ரயிலின் முன்புறம் கூரான மூஞ்சியுடன் உள்ளே விமானம் போன்ற அமைப்பில் இருந்தது. ஆட்கள் ஏறினதும் ஆட்டோமேட்டிக் கதவு தானாக மூடிக்கொண்டது. 

அடுத்த ஸ்டேஷனின் பெயர் என்ன என்பது எல்.ஈ.டி. யில் எல்லாக் கதவுக்குப் பக்கத்திலும் வருகிறது. ஒலிப்பதிவாகவும் வருகிறது… 

“எந்த ஸ்டாப்பில் இறங்குவது” என்று அவளிடம் கேட்டேன்

“சரியாக ஐந்தாவது ஸ்டாப்பில்…” என்று இழுத்தவள்  

“கடைசி ஸ்டாப்” என்று முடித்தாள்.


சரியாக இருபத்து ஐந்து நிமிடங்களில் லண்டன் சென்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் சென்று நின்றதும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினோம்.

செக்கிங் எதுவும் இல்லை ஆனால் ஸ்டேஷனுக்குள்ளே வருகிற போதே எப்படியோ அதேபோல் டிக்கட்டை பஞ்ச் செய்யும் எந்திரங்கள் இங்கும் இருந்தன. 

ஒவ்வொரு கேட்டிலும் டிக்கட்டை பஞ்ச் செய்ய வேணும் அப்படிச் செய்யாவிட்டால் கேட் திறப்பதில்லை. உள்ளே வரும் போதும் வெளியே போகிற போதும் இதே சிஸ்டம் தான். 

மிகவும் அழகாக தங்கத்தால் வேயப்பட்டது போன்ற கூரைகளும் பின்னிப் பிணைந்த பல வளைவுகள் கொண்ட தண்டவாள பாதைகளும் என புதிதாக வருபவர்களுக்கு இலகுவில் பிடிபடாத அமைப்பில் கட்டப்பட்டிருந்தது லண்டன் சென்ரல் ரெயில்வே ஸ்டேஷன்.


லண்டன் நேச்சுரல் மியூசியம் போவதற்கான அடுத்த ரெயில் எடுப்பதற்கு சப்வே எடுக்க வேண்டியிருந்தது. எஸ்கலேட்டர் எடுத்து கீழே போனோம்… 

மறுபடியும் இன்னொரு எஸ்கலேட்டர் எடுத்தோம். ஒவ்வொரு எஸ்கலேட்டரும் சுமார் ஐம்பது தொடக்கம் அறுபது அடி நீளமிருக்கும் இப்படியே நான்கு எஸ்கலேட்டர்கள் எடுத்து கீழே போய் விட்டோம் ஆனால் எப்போது அடுத்த ஸ்டாப் என்பது மட்டும் சஸ்பென்சாகவே இருந்தது…

ஐந்தாவது எஸ்கலேட்டரில் இறங்கிய பின் நேராக நடந்து பின் இடப் பக்கம் திரும்பியபோது லண்டன் நேச்சுரல் மியூசியம் போவதற்கான ரெயில் வருவதற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் என்று எல்.ஈ.டி. திரையில் ஓடிக்கொண்டிருந்தது… 

ஐந்து நிமிட பயணத்துக்கு பின் மூன்றாவது ஸ்டாப்பில் இறங்கியதும் ஒரு எஸ்கலேட்டர் எடுத்து மேலே போய் வலப் பக்கம் திரும்பி பார்த்தபோது ஒரு பிரமாண்டமான கட்டிடத்தின் முன் நின்றிருந்தோம். 


அதுதான் லண்டன் நேச்சுரல் மியூசியத்தின் முகப்பு தோற்றம்…  பார்த்தவுடன் பிரமிக்க வைக்கும் அழகுடையது. 


அடுத்ததாக பக்கிங்காம் அரண்மனை மற்றும் லண்டன் பிரிட்ஜ் போகவேண்டி இருப்பதால்  “முடிந்தவரை விரைவாக பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்திடுங்கோ” என்று  உள்ளே போவதற்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தேன்.


உலகில் மிகச் சிறந்த அருங்காட்சி கூடங்களில் இதுவும் ஒன்று. தேம்ஸ் நதி பற்றிய வரலாற்று பொக்கிஷங்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களை இங்கு வைத்து பாதுகாக்கிறார்கள். 


மிருகங்கள், பறவைகள், கற்கள், மரங்கள், இலைகள் என ஆளாளுக்கு கண்ணில் பட்டதையெல்லாம் படம் பிடித்தோம். 



ஏறக்குறைய பத்தாயிரம் காரட் எடை கொண்ட உலகின் மிகப் பெரிய ப்ளூ ரூபி கல் ஒன்று கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

 

செத்துப்போன பறவைகள், மிருகங்களைப் பதப்படுத்தி அப்படியே வைத்திருந்தார்கள். என் பிள்ளைகள் எல்லாவற்றையும் படம் பிடிப்பதில் முனைப்பு காட்டினர். 


பயணம் தொடரும்…
-தியா-

ஜூலை 23, 2020

அழகிய ஐரோப்பா - 5

படகுச் சவாரி




இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது. 


காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன்.


மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் ரெண்டு மூன்று நிமிடம் ரசித்துவிட்டு அதன் பின் ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தேன்.


மதியம் தாண்டிய போது மழை ஓய்ந்து வெண்முகில் நடுவே வெயில் கொஞ்சம் எட்டிப் பார்த்தது. 


மாலைப் பொழுதில் எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்ன போது 




“ப்ளூ வாட்டர்” என்ற இடம் அருகில் இருப்பதாகவும் இருபது நிமிச பஸ் பயண தூரம் என்றும் சித்தப்பா சொன்ன போது அடுத்த நொடியே கிளம்பிவிட்டோம்.


பஸ்  நல்ல விசாலமானதாகவும் சுத்தமானதாகவும் இருந்தது. சரியாக இருப்பது நிமிட பயணத்தில் ப்ளூ வாட்டரை  வந்தடைந்து விட்டோம். 


மாலை நேரத்துத் தங்க நிற சூரிய ஒளியில் மூன்று பக்கம் மலைகளாலும் ஒரு புறம் நிலம் சூழ நடுவில் ஒரு சிறு நகரம் வடிவமைக்கப் பட்டிருந்தது. 


கண்ணாடி இழைகளால் கட்டப்பட்ட பிரமாண்டமான ஷொப்பிங் சென்டரில் மாலைச் சூரியன் பட்டு தங்கத் தகடுகள் பதித்த மாளிகை போல் பிரமிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.





ஷொப்பிங் சென்டர் உள்ளே சென்றபோது மால் ஆப் அமெரிக்காவை ஞாபகப் படுத்துவது போல் இருந்தாலும் வெளியில் இருந்த பிரம்மாண்டம் உள்ளே இருக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான்.


ஷொப்பிங் முடிந்து வெளியே வந்த போது இளமான காற்று வீச அலைகளின் ஓசை ஒருவித இன்பத்தைத் தந்தது.


“படகுச் சவாரி போகலாமா” என்று என் மனைவியைக் கேட்டேன் 


“அதுக்கென்ன போகலாமே” என்றாள் மறுப்பேதுமின்றி 


“ஹய்யா” என என் பிள்ளைகள் துள்ளிக் குதித்தனர். 


எனக்கோ அல்லது என் மனைவிக்கோ முன்னெப்போதும் படகுச் சவாரி செய்து முன்னனுபவம் இல்லாததனால்  கன்னிச் சவாரிக்காக வரிசையில் காத்திருந்து ரிக்கெட் எடுத்தோம்.


படகில் ஏறி எப்படி அமர்வது, எப்படி இயக்குவது என்பது தொடர்பாக ஒரு டெமோ காண்பித்தார்கள் அதன்படி பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கொண்டு படகில் ஏறி இருந்தோம்.


முதன் முதலாக சுக்கானை பிடித்த போது கை ஒரு விதமாகப் பதற தொடங்கியது. ஓரிரு நிமிடங்களின் பின் ஒரு பரீட்சயமான படகோட்டிக்கு உரிய மிடுக்குடன் சுக்கானைப் பிடித்து ஓட்டத் தொடங்கினேன்.


இரு கரையிலும் ஏராளமான படகுகள் கட்டப்பட்டிருந்தன. எண்ணற்ற காட்சிகளை அனுபவித்துக் கொண்டே படகில் பயணமானோம். 


எங்களுக்குத் தரப்பட்ட நாற்பத்து ஐந்து நிமிடங்களில் எனது கேமராவுக்கு நிறைய தீனி கிடைத்துவிட்ட சந்தோசம் எனக்கு. 


ஓடும் படகில் ஒவ்வொரு ஸ்பாட்டிலும் என் செல்ஃபி ஸ்டிக்கை நீட்டி சில காட்சிகளைப் படம் பிடித்தேன். 


செவ்வானம் கருஞ்சிவப்பு சூரியனை மெள்ள மெள்ள விழுங்கிக்கொண்டிருந்தது. தண்ணீர் முழுவதும் பச்சை நிற மின்னொளியில் பளபளவென மரகதமணிபோல் மின்னிக் கொண்டிருந்தது.


“இருளுது இனி வீட்டுக்குப் போகலாமா” என்றாள் என் மனைவி 


“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன… ஏன் அவரசம் என்ன அவசரம் பெண்ணே…” என்ற பாடலை முணுமுணுத்த படி நேரத்தைப் பார்த்தேன் எமக்குத் தரப்பட்ட நேரம் முடிவடைய இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தன. படகை ஓரமாக நிறுத்தி விட்டு மெதுவாக இறங்கி நடந்தோம்.


“படத்தைக் காட்டுங்கோ பார்ப்போம்…” என்றவாறு என் போனை பிடுங்கியவள் அருமையான சில காட்சிகள் தவறாக “க்ளிக்” செய்யப்பட்டு முழுவதுமாகக் கோணம் மாறியிருந்ததைக் கண்டு ஒருவித ஏளனமாக என்னைப் பார்த்தாள். 






எதுவும் பேசாமல் மறுபுறம் பார்த்தேன். என் நிலை கண்டு எனது மனைவிக்கும் சங்கடமாக இருந்ததை உணர்ந்தேன். 


எங்களை கூட்டிச் செல்வதற்கென மாமா கார் கொண்டு வந்திருந்தார். காரில் ஏறி அமர்ந்து கொண்டதும் ஏஸியை முடுக்கிவிட்டு நகர் நோக்கி விரைந்தார். 


பிரதான நுழைவு வாசலுக்கு முன்பாக ட்ராஃபிக் அதிகமாக இருப்பதால் போலீஸ்காரர்கள் பாதையை அடைத்திருந்தனர். காரை வெளியே எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டவராக குட்டிக்குட்டி கடைகள் இருந்த ஒரு தெருவில் வளைந்து ஒருவழிப்பாதை ஒன்றில் ஏறி மறுபடியும் நெடுஞ்சாலை ஒன்றில் இறக்கி ஒருவாறாக இரவு எட்டு மணிக்கு முன்னதாக வீடு வந்து சேர்ந்துவிட்டோம். 


பயணம் தொடரும்…

-தியா-