டிசம்பர் 30, 2015

சாமக்கவி












வாயு தேவனும் வருண பகவானும்
சங்கமித்து இசை பயிலும்
ஒரு பனிக்கால இரவின்
முன்சாமப் பொழுதொன்றில்
கட்டிலில் சாய்ந்தபடி
கவிதை எழுதத் தொடங்கினேன்.
கவிதை நீண்டு கதையாகிப் பின்
தொடர்கதையாய் நீண்டது.
சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன்.
தீபாவளிக்கு இல்லாத விடுமுறை
திருக்கார்த்திகையில் வந்ததால்
வானத்து விண்மீன்கள்
நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட .
ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது
எழுந்து விளக்கை அணைத்தேன்
வீணை மீட்டியபடி
பாடத் தொடங்கினேன்
ஒரு சாமகானம்.

– தியா –


டிசம்பர் 24, 2015

கிழித்தெறியப்படும் கவிதைகள்










இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல்  – நாம்
எம் கவிதைகள் படித்தோம்

காலம் உருண்டு இச்சைக் கருவிக்கு
சண்டை போட்டபோது
கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள்

சாத்தான்களின் இவ்வுலகில் – இங்கு
யார்மீதும் புகார்களுக்கு இடமில்லை – ஆதலால்
எங்கள் கவிதைத் தாள்களை
அடிக்கடி இங்கே பேய்கள் கூடிக் கிழித்தெறிகின்றன.

அந்தர வெளியில் மிதந்து
காட்சிகள் மட்டுமே வாழ்வென நம்பும்
தலைகீழ் பட்சிகளாய்
எக்கணமும் அவிழ்க்கத் துடிக்கும் வன்மத்துடன்
ஒவ்வொரு தெருவின் ஓரத்தையும்
முகர்ந்து பார்த்தபடி நகரும்  நிர்வாண நாய்கள்…

களியாட்டச் சுகம் தேடும் வேட்கையில்
புணர்வதை மட்டுமே குறியாகக் கொண்டு
குறிகள் நிமிர்த்தி நகக் குறிகள் பதித்து
குரல்வளை நசுக்கும் நகரத்து ஓநாய்கள்…

இரண்டகப்  பிண்டங்கள் உலவும் பெருநகரில்
கவிதைகள் பற்றிய தேடலில் – பிசாசுகள்
பேதங்கள் பார்ப்பதில்லை.
பிண்டம் ஒன்றே நோக்கெனக் கொண்டு
எங்கள் கவிதைகளை – அவை
எப்போது வேண்டுமானாலும்
நொடிப் பொழுதில் கிழித்தெறிகின்றன.

– தியா –

டிசம்பர் 23, 2015

மெல்லிதழ் முத்தம்











பனிக்கால மினசோட்டா  நதிகளாய்
இறுகிப் போன முகத்துடன்
கண்ணாடி வீட்டில் இருந்து
கல்லெறிய முயல்கிறான்…
கிடைத்த ஒரு முத்தத்தைச்
சரிசமமாகப் பகிர்ந்து கொண்டபின்
மீண்டும் முடியாது என
அடம்பிடித்து முறித்துக் கொண்டவளிடம்
மற்றுமோர் முத்தத்திற்கு முனைந்து
காதோரம் ஊதிவிட்டுத் திரும்பிய பின்
தோளில் தூங்கும் குழந்தையை
படுக்கைக்கு மாற்றுவது போல்
சத்தமே இல்லாமல் அவளைப் பிரிந்தான்
மூடிய கதவின் சாவித் துவாரங்களிடையே
ஒவ்வொரு சொற்களும் கழன்று விழும் போது
மீண்டும் வாயினுள் நுழைய முடியாதவாறு
பூட்டப்பட்டு விடுகிறன அவனின்  
அன்பிற்குரிய சொற்கள் அனைத்தும்….
மீண்டும் பின்னிரவில் கொடுத்த
அடக்கம் செய்யப்பட்ட அந்த முத்தம்
பற்றிய நினைவுகளுடன்  
ஒரு பூனை போலவும்…
காத்துக் கிடந்து குறி நோக்கி
மெல்ல நகரும் புலி போலவும்…
வெகு இயல்பாய் தடம் பதித்து
பூட்டிய கதவினை மெல்லத் திறந்து
மீண்டும் பதித்தான்
ஒரு மெல்லிதழ் முத்தம்.

– தியா –

டிசம்பர் 22, 2015

கைப்பேசிக் காதல்








முந்தியெல்லாம் நான்
சிக்கனத்தில் வாழ்ந்த போது
சொப்பனத்தில் மிதந்திருந்தேன்
காசைச் சேர்த்து நல்ல
கனவானாய் வாழ எண்ணிக்
கனவில் மிதந்திருந்தேன்.
கைப்பேசி வந்த பின்னர் – என்
கனவெல்லாம் ஓடிப் போச்சு  – இனி
எப்போது பணம் சேர்த்து
பந்தாவாய் நான் வாழ்வேன்?
கைப்பேசிக் காதலாலே
கைப்பணமும் கரைந்து போச்சு
கண்மணியாள் வந்த பின்னர்
காதல் செய்த வேலையாலே
கைப்பேசி ஒன்றைக்
கடனுக்கு வாங்கி வந்தேன்.
செல்லுக்கு (Cell Phone) பில்லு (Bill) கட்டி
ஓடாய்த் தேய்ந்து போனேன்.
கைப்பேசிக் காதலாலே – அதை
நெஞ்சருகில் சொருகி வைத்தேன்.
சட்டைப் பையில் வைத்தால்
கான்சர் (Cancer) வந்து சேருமென்று
பலபேர் கதையுரைத்தார்.
சட்டைப் பையை விட்டு விட்டு
கால் சட்டைப் பையில் போட்டு வைத்தேன்.
ஆண்மை கெட்டுப் போகுமென்று
அன்புடையோர் சொல்லி நின்றார்.
ஐயகோ என் செய்வேன்?
கைப்பேசிக் காதலாலே
கடனாளி ஆன பின்னர் – என்
கனவான் நினைப்பும் போச்சு
காசும் கரைந்து போச்சு.
இந்த லச்சணத்தில்
நெஞ்சும் கெட்டு
ஆண்மை இன்றி
ஆதாயம் எதுமில்லாக்
கைப்பேசிக் காதலாலே
ஆனதென்ன மிச்சம்?
என்றாலும் விட்டேனா…
கைப்பேசிக்கென்றொரு
கணக்கான சட்டை தைத்தேன்.
கால் கொலுசு போலதனை – என்
காலணியில் கொலுவி விட்டேன்.
நெஞ்சுக்கும் நிம்மதி – என்
ஆண்மைக்கும் காப்புறுதி.

-தியா-