இடுகைகள்

செப்டம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் செல்லக்குட்டிக்கு பிறந்தநாள்

படம்
எங்கள் செல்லக் குட்டி அக்ஷிகா தனது இரண்டாவது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் 01.10.2009 வியாழக்கிழமை இனிதே கொண்டாடுகிறார். அவரை அன்புள்ளங்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

ஆறாந்திணை - 05

படம்
பாலை :- மணலும் மணல் சார்ந்த இடமும். மணல் தின்ற புல்வெளி அனல் தின்ற பனந்தோப்பு புதையுண்டு எரியுண்ட மீதிக் காடுகள் எல்லாம் மணல் மேடாய்த் திட்டுகளாய்... எரியுண்ட தேசத்தில் சிதைவுகள் மட்டுமே மீதியாக... கால் மிதிக்கும் இடமெல்லாம் பல்லிளிக்கும் கூரிய முட்கள் யுத்த காண்டம் முடிந்த பின்னர் சிதைவுகளாய் எச்ச சொச்சம். வாழ்விழந்த வயல்வெளிகள் பொலிவிழந்து... பூவிழந்து தளிரிழந்து... கருகி நிற்கும் மரங்கொடிகள்... சிதைவுகளைச் சுமந்தபடி தனித்திருக்கும் வீதிகளும் வீடுகளும்... மீண்டும் ஓர் நாள் தோண்டப்படுவதற்காய் காத்திருக்கும் மண்தரைகள் எல்லாம் ஒன்றுகூடி எரியுண்ட தேசத்தின் காட்சிகளாகிப் படமெடுக்க நான் மட்டும் ... இழந்தவற்றைத் தேடியபடி மீண்டும்... மீண்டும்...........

ஆறாந்திணை - 04

படம்
குறிஞ்சி :- மலையும் மலைசார்ந்த இடமும். மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............

இனி சினிமா.....?

படம்
எங்கே போகிறது தமிழ் சினிமாவும் தொலைகாட்சிகளும் என்னும்படியாக அண்மைக்கால நிகழ்வுகள் அமைகின்றன. போட்டி போட்டு படங்களை வாங்கும் தொலைக்காட்சி மற்றும் சஞ்சிகை நிறுவனங்கள் தமது படத்துக்கு மட்டும் முன்னுரிமை தருகின்றன. சில சனல்களில் செய்தியின்போதுகூட தமது படங்கள் பற்றிய பேச்சுத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் தாம் விலை கொடுத்து வாங்கிய படம் ஓடாது எனத் தெரிந்தும் ஆறு ஏழு வாரங்களாக தமது தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தில் வைத்து கொண்டாடி ரசிகர்களை தன்பால் கவர்ந்திழுத்து ஒருமுறையாவது படத்தை பார்க்கவைத்து வீணே மூன்று மணி நேரத்தை தொலைத்து பணத்தையும் வீணாக்க வைக்கும் இவர்களை என்ன செய்வது? முன்னர் ஒருகாலத்தில் பாடல்களை எல்லா சேனல்களிலும் பார்க்க முடிந்தது இன்று காலம் மாறிவிட்டது. அந்தந்த படப் பாடல் காட்சிகளை பார்க்க வேண்டுமாயின் குறிப்பிட்ட படத்தை வாங்கும் சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது. இதில் பில்டப்பு வேற. ஆதங்கத்துடன் தியா.....

கண்ணீர்

படம்
ஊனை உருக்கி உடலை வருத்தி தினம் சோற்றுக்கு வழியின்றி சொந்த மண்ணைப் பிரிந்து அகதி முகாமில் இடர்படும் தமிழன் உண்ட சோற்றில் உப்பில்லை கண்ணீர் துளி விழுந்து கசக்கிறது சோறு…

ஆறாந்திணை - 03

படம்
நெய்தல்:- கடலும் கடல் சார்ந்த இடமும் பல்லாயிரம் உயிர் தின்றும் அடங்காது ஆர்ப்பரிக்கும் கடல் இரைச்சல் நிறைந்த உலகின் சொந்தக்காரனாகிப் பயமுறுத்தும் பூதம். எம் மனம் போல் அமைதியின்றிப் பாய்கிறது நீல நீர். பெருகி வந்து உயிர் குடித்து உயிர்ச் சுவடழித்து - எம் நிம்மதியைக் குலைத்து எம்மை நிர்க்கதியாக்கிய அலை. மணல்த் திட்டால் மூடி எதுவும் நடவாதது போல் பாசாங்கு செய்யும் நீண்ட கரை எல்லாம் ஒன்றுகூடி இரைகிறது இன்னும் வேண்டுமென்று.

ஆறாந்திணை - 02

படம்
முல்லை:- காடும் காடு சார்ந்த இடமும் ஆயிரமாயிரம் நினைவலைகள் முட்டி மோதின. நினைவழியாப் பொழுதுகளில் உடும்பு முயல் மான் வேட்டையாடிய காடுகள் தனிமையில் உறையக் கண்டேன் . காட்டாற்றின் கரையினிலே கதையளந்த காலம் போய் மாயத் தோற்றங்கள் மனத் திரையில் கோலமிடக் கண்டேன். மவுனமாக வரையப்பட்ட என் கவிதையின் வரிகள் போல் அசைவற்றுக் கிடக்கிறது என் பூர்வீகக் காடு.

தாய்

படம்
சுதன் லண்டனில் இருந்து வந்து முன்று நாளாகியிருந்தது. ஏழு வருட லண்டன் வாழ்க்கை அவனை எவ்வளவோ மாற்றியிருந்தது. நீண்ட காலத்தின் பின்னர் தனது நண்பர்களைச் சந்தித்த சந்தோஷத்தில் அவர்களுடன் பீச்சு பார்க் என்று எல்லா இடமும் சுற்றினான். வகைவகையான வெளிநாட்டு உணவுகள், குளிர்பானங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தினான். வீடு திரும்பும்போது மணி இரவு பத்தைத் தாண்டியிருந்தது. அவனின் வரவுக்காக தாய் விழித்திருந்தாள். “அம்மா பசிக்குது” “………………..” “அம்மா பசிக்குது சோறு இருக்கா…? ” “இரப்பு வாறன்” என்றபடி தாய் அடுப்படிக்கு ஓடினாள். இருந்த சோறு கறி எல்லாம் போட்டு குழைத்து திரணையாக்கி ஒரு உருண்டையாக கையில் கொடுத்தாள் தாய். “ ஆ… என்ன அருமை இப்பிடி ஒரு சாப்பாடு சாப்பிட்டு ஏழு வருஷமாச்சு… இப்பதான் சாப்பிட்டமாதிரி திருப்தியாக இருக்கு…” என்றான். அவனை லண்டன் வாழ்க்கை எவ்வளவோ மாற்றியிருந்தாலும் ஒரு தாயாக அவனிடம் எந்த மாற்றத்தையும் காணாது வியந்து நின்றாள்.

தொடரும் காதல்

படம்
இப்போதுதான் பத்து ஆண்டுகள் கழித்து திரும்பி வந்திருக்கிறேன். எம் இரு விழிகள் சந்தித்து கதைபயின்ற அந்தக் கட்டிடம் வெட்டிச் சாய்க்கப்படாமல் இன்னும் கிளை விட்டு நிழல் பரப்பும் பெருமரம்... 'சில்' என்ற காற்று வீசும் பெருவெளி மைதானம் கல்லில் வடிக்கப்பட்ட இருக்கைகள் எல்லாம் அப்படியே இருந்தன எம் இருவரது இதயம் போல். பெருமரத்தின் நிழற்பரப்பில் நிலம் மறைத்துப் போர்வையாக உதிர்ந்திருந்த இதழ்கள் காற்றில் தாளம் போட்டன. எம் கண்கள் கதை பயின்ற பல்கலை வளாகம் இப்போது அந்நியமாய் போனாலும் எம் இருவர் காதல் மட்டும் வாழ்வாகி வலம் கொளிக்க கண்டேன் இன்று.

ஆறாந்திணை - 01

படம்
மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும் எதுவும் விதைக்கப்படாத வயல்வெளிகள் யாரும் புதிதெடுக்காத தரிசுநிலங்களாக… கண்மூடித் திறப்பதற்குள் கற்சிலையாய் அமைந்துபோன மனிதர்கள் வாழ்தல் எப்படிக் கொடூரமானது? கரடுமுரடான பாதை போல் கடினமானதா என்ன? எதுவுமே புரிவதில்லை… கால் பதிக்க முடியாத சேற்று வயல்வெளிகள் கட்டாந்தரையாகிக் கண்ணீர் வடிக்கக் கண்டேன். ஆற்றுப்படுக்கைகளில் ஆங்காங்கே பிளவுகள்.. வெடிப்புகள். உடைப்பெடுத்துப் பாயும் வெற்றுக்குளங்களில் செத்துக் கிடந்தன நீர்க்காக்கைகள். குளக்கட்டின் மரநிழலில் சிலையாகச் சமைந்திருந்தார் பிள்ளையார்…

காதல் வானம் - பாகம் - 03

படம்
பட்டென்று வெடித்துப் பூக்கும் பருத்தியாய் இமை திறந்த சுரபி கைகளைமேலே தூக்கி சோம்பல் நீக்கி நெட்டி முறித்தாள். “ஒரு பொம்பிளைப் பிள்ளை நித்திரையால எழும்புற நேரத்தை பாரன்…அந்தப் புள்ளையும்இருக்குது அதைப் பாத்தெண்டாலும் வேளைக்கு எழும்பலாம் தானே…பாவம் அந்தப்பிள்ளைவிடியக்காலமையும் குருவிக் காவலுக்கு போட்டுது.” செண்பகம் வாய்கு வந்தபடி பேசிக்கொண்டு தன் கருமங்களில் கண்ணுங்கருத்துமாயிருந்தாள். “அம்மா இத்தினை நாளும் நான் விடிய நாலு மணிக்கெல்லாம் எழும்புறனான்தானேஇப்பதானே இப்பிடி கனநேரம் நித்திரை கொள்ள கிடைச்சிருக்குது…கேட்டால் வேளைக்குஎழும்பி செய்து தருவன்தானே அதுக்கேனணை இப்பிடி கத்துறாய்…” “அதில்லை மோனே கொப்பா வயலுக்கு வரப்பு வெட்ட போனவர்…சுமதியும் குருவிக் காவலுக்கு குளத்தடி வயலுக்கு போட்டாள். சாப்பாடு கொண்டுபோக வேணும்…சிறுபோக விதைப்பெண்டால் சும்மாயே…” “நான் இண்டைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகட்டே அம்மா…” “என்ன மோனே லூசுத்தனமாய் கதைக்கிறாய் கொப்பான்ரை குணம் தெரியும் தானேவயல் பக்கம் உன்னை விடக்கூடாதெண்டு பொத்திப் பொத்தி அந்தாள் வளக்குது நீ என்னண்டால்…” “இப்ப படிப்பு இல்லைத்தானேயம்மா ஒருநாளைக்க

பேசும் பேனாமுனை

படம்
என் பேனா செங்குத்தாய் ... கொஞ்சம் கோணலாய் நிலைக் குத்திக் கண்ணீர் வடிக்கிறது . வார்த்தைகள் செய்து கொடுத்த இட வசதிக்குள் வாழப் பிடிக்காமலோ என்னவோ மீண்டும் மீண்டும் வெற்றுத் தாள்களில் கோடுகளாய் வளைவுகளாய் புள்ளிகளாய் இன்னும் பலவாய் தன்னை நுழைத்து திருப்திப் பட்டுக்கொள்கிறது

மனிதாபிமானம்

படம்
பேருந்தில் அந்த ஊனமுற்றவர் மிகவும் சிரமப்பட்டு ஏறி ஒவ்வொருவராக மன்றாடிப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை. சிலர் பார்த்தும் பாராது போல் இருந்தனர். வேறு சிலர் முகத்தை வெளியே திருப்பி கண்ணாடி யன்னலூடாக வெளியே பார்த்து விறைத்திருந்தனர் இன்னும் பலர் காதில் வயர் மாட்டி கைப்பேசியில் பாடல் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருந்தனர். அந்த ஊனமுற்ற முதியவரோ ஏமாற்றத்துடன் எல்லோரையும் பார்த்தார். யாரும் அவரைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஈற்றில் வெறுமையான தன் பிச்சைப் பாத்திரத்தை ஒருதடவை பார்த்துப் பெருமூச்சு விட்டபடி பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உதவி செய்யவேண்டும் போல் மனம் துடித்தது. மெதுவாக என் ஊன்றுகோலை குத்தி நிலையெடுத்துக் கொள்கிறேன். பின்னர் கைகொடுத்து அவரை இறக்கிவிட்டு... அவருக்கு ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் குனிந்து என் பாத்திரத்தைப் பார்க்கிறேன். அதுவும் வெறுமையாக.........

காதல் வானம் - பாகம் - 02

படம்
காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள். “பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…” “விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…” “ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே” “இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…” “அதுசரி அவையின்ரை பிரச்சினையை அவையளே தீர்க்கலாம்தானே அதுக்கேன் உன்னை கூப்பிட்டவை… நீயென்ன சமாதான நீதவானே…” “நீயென்ன ஒண்டும் தெரியாமல் பேய்க்கதை கதைக்கிறாய்… பரணரூபன் வீட்டிலை ஒண்டென்றால் அது என்ரை வீட்டை நடந்தமாரித்தான்…அவனார் என்ரை நண்பனெல்லே… அதைவிடு அவன்ரை தங்கச்சிக்காக எண்டாலும்…அவளும் என்னோடை நல்லமாரித்தானே…” “நல்லமாரி எண்டால்…” “நல்லமாரி எண்டால் நல்லமாரித்தான்…” சீலன் புன்முறுவலுடன் கூறிவிட்டு பார்த்துக் கொண்டிருக்க, “உந்தக் கூத்து எப்பதொடக்கம் நடக்குது. ஒருக்கால் நான் அத்தையிட்ட வரவேணும் போலதான் கிடக்கு…” “ஓம் சுரபி சொல்ல மறந்துட்டன் அம்மாவ

பள்ளிக்கூடம்

படம்
“குட்மோர்னிங் சேர்… குட்மோர்னிங் ரீச்சர்…” என்றபடி பாடசாலை வளவினுள் பவ்யமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் ரம்யா. சிறு வயது முதலே பள்ளிக்கூடம் போவது என்றால் ஒவ்வொருநாளும் பெரிய போராட்டம்தான். ஆனால் இன்று… வழமைக்கு மாறாக தானாக எழுந்து குளித்து சாமி கும்பிட்டு சாப்பிட்டு மடிப்புக் குலையாத உடையணிந்து … பார்க்கவே பெரிய அழகியாட்டம்…முதல் தடவையாக பள்ளிக்கூட ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடவுளை வேண்டிக்கொண்டு நிமிர “குட்மோர்னிங் ரீச்சர்…” என்றாள் ஒரு சிறுமி பதிலுக்கு “குட்மோர்னிங்” என்றபடி சிறு புன்முறுவலித்தாள் ரம்யா.

மழை பற்றி...

படம்
மனிதர் கூடி மனிதர் கூடி பூமி இப்போ பாரமாச்சு வயல்வெளிகள் குளங்கள் தோறும் கட்டிடங்கள் நிரம்பிப் போச்சு காடு மலை சோலையெல்லாம் கட்டாந்தரை ஆகியாச்சு - இனி கண்ணீர் விட்டு அழுதால் மட்டும் தண்ணீர் என்ற நிலையாய் போச்சு

காணாமல் போனவன்

படம்
“அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ” இது தினசரி புவனாவின் மகன் தினேஷ் கேட்கும் கேள்வி. “இந்தக் காலண்டர் முடிய அப்பா வருவாரடா” கண் கலங்க பதில் கூறுவாள் புவனா. “எப்ப அம்மா இந்தக் காலண்டர் முடியும்? ” ஒண்டொண்டாய் ஒவ்வரு நாளும் கிழிக்க எப்பாவது ஒருநாள் முடியும்” நாளுக்கு நாள் காலண்டர் பக்கங்கள் குறைந்து கொண்டு போனது… இப்போது பழைய இடத்தில் புதிய காலண்டர் “அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ” தினேஷின் அதே கேள்வி… “இந்தக் காலண்டர் முடிய வருவாரடா……..” கண் கலங்கினாள் புவனா.

காதல் வானம் - பாகம்-01

“சக்தியை நோக்க சரவணபவனார் திஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிங்கினியாட…” பக்தி மயமாக கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது. “திக்கற்றோருக்கு தெய்வமே துணை… முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்ப குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் கேட்பார்கள். இடையிடையே மணியம் விதானையார் மைக்கைப் பிடித்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். பூசாரி ஆறுமுகம் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். மஞ்சள் சால்வை கட்டிய சில தொண்டர்கள் அங்குமிங்கும் அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். செண்பகமோ எப்ப திரை விலகும் எப்ப முருகனருள் கிடைக்கும் என விழிகள் அகலத் திறந்து முருகன் சந்னிதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஊரின் ஒரேயொரு சைவக் கோயி

ஒற்றை வார்த்தை

படம்
வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்

இனிவரும் காலம்...

படம்
உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .

அதிரூப நாயகியே

படம்
கண்களைப் பார்க்கிறேன் கனிவு தெரிகிறது உதடுகள் எதையோ சொல்ல நினைக்கிறது புருவம் உயர்ந்து விரிந்து எழுந்து தாளம் போடுகிறது கூந்தல் வழிந்து தோளில் தவழ்ந்து நளினமாடுகிறது போட்டுமின்றி பூவுமின்றி-உன் பிறைநுதலில் ஒரு அழகிய கோலம் கண்டேன் அலங்காரம் ஏதுமின்றி அழகாகத் தெரிகிறாயே அதிரூப நாயகியே கருணை மலை பொழிந்து காட்சி தரும் கன்னிகையே இத்தனை அழகாக உனைப் படைத்தான் தாள் வணக்கம்