அக்டோபர் 30, 2020

காலத்துயர்


காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது. உலகின் ஏதோ ஒரு மூலையில். எங்கோ ஒரு நாட்டில். தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை.


ஒரு காகத்தின் கரைதல். சேவலின் கூவல். குருவிகளின் சங்கீத ஓசை. குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு.

வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட. மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு.

இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்று நாட்டுச் சூழலில் தனக்குத் தெரிந்த ஓரிரு ஆங்கிலச் சொற்களில் பேசிக் கொடுப்பதை உண்டு, குடித்து, உறங்கி, கண்ணீர் வடித்துக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

வாழ்க்கையைப் பல கோணங்களினூடாக பார்த்த அவனுக்கு இது ஒன்றும் புதிய விடயமில்லைத்தான் ஆனாலும் இதுவரை நிகழ்ந்த எல்லாத் துன்ப துயரங்களுக்கும் அருகிலிருந்து பங்கெடுத்த தோழ் கொடுத்த அவன் குடும்பம் இப்போது அவனுடன் இல்லை என்பதும் அவன் எந்தக் குடும்பத்துக்காக இத்தனை காலம் படாத துன்பமெல்லாம் பட்டானோ அவர்களை ஆளாக்க முடியவில்லையே என்ற கவலையும் அவன் மனதைக் கனமூட்டிக்கொண்டிருக்க இதய சுமை தாங்காது பாரம் தலைக்கேறியது.

இடம்பெயர்ந்து சிறு குடிசையில் வசித்த போதும் விறகு வெட்டிக் குடும்பத்தைப் பொன்போல் காத்து வந்தார் கணேஸ். மூத்த மகன் நன்றாகப் படித்த போதும் இளையவன் சீலனும் மகள் செல்லாவும் நன்றாகப் படிக்கவேண்டுமென்று படாத பாடெல்லாம் பட்டு உழைத்து வந்தார்.

காலச்சுழற்சியில் மகள் செல்லாவும் போராட்டத்தில் இணைந்துவிட ஆடிப்போன கணேஸ் மூத்தமகன் சுயனை உடனடியாக வௌிநாடொன்றுக்கு அனுப்பும் விருப்பம் கொண்டவராய். உறவுகளிடம் உதவி கேட்டு கூடவே தான் சேமித்த பணத்தையும் முதலிட்டு கொழும்புக்கு அனுப்பினார்.


நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. இன்று போகலாம் நாளை போகலாம் என ஏஜன்ஜி சொல்லி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்.

இரவு பத்தைத் தாண்டியிருந்தது. தாய் தொலைபேசி அழைப்பில் இருப்பதாக வந்த செய்தி கேட்டு ஓடியவன் திகைப்புடன்

“அம்மா என்ன இந்த நேரத்திலை”மகனின் குரலைக் கேட்டதும்

“ஐயோ” மறுமுனையில் தாய் விமலா அழத்தொடங்கினாள். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விக்கிப்போய் வாயடைத்து நின்றான்.

“அப்பா விறகு வெட்ட போன இடத்தில”

“இடத்தில என்னம்மா சொல்லு”

“மிதிவெடிலை கால் ஒண்டு”

“கடவுளே” கண்கள் இருண்டு அவனுக்குள் ஏதோவெல்லாம் செய்யத் தொடங்கியது. இனம் புரியாத பீதி விரட்டியது.

“அம்மா அப்ப உடன நான் வாறன்”

“இல்லையப்பன் நீ வரவேண்டாம். இனி எங்கடை வாழ்க்கை உன்ரை கையிலைதான்” அவளால் எதுவுமே அதற்கு மேல் பேச முடியவில்லை.

அவனுக்கு இரவு முழுவதும் நரகமாக விளங்கியது. அதிகாலையில் இருளுடன் இருளாக ஏஜன்ஜி வந்தான். எல்லோரும் அவனுடன் போகத் தொடங்கினர். அத்தனையும் இளைஞர்கள்
“களவாக இத்தாலி போக கப்பல்தான் சிறந்தவழி” என்ற ஏஜன்ஜியின் பேச்சினை நம்பி வௌிக்கிட்டு விட்டனர்.

கப்பல் தள்ளாடித் தள்ளாடி பயணத்தைத் தொடர்ந்தது. ஒருநாள், இரண்டாம் நாள், இப்படி இடைநடுவில் பிடிபட்டு அந்நிய நாட்டுச் சிறையில் இப்படி தன்னுடைய வாழ்வு அடைபட்டு போகுமென்று அவன் எப்படி நினைத்திருப்பான்.

இப்போது அவனுடைய கனவில் அடிக்கடி அம்மா வந்து போகிறாள். அப்பா ஊன்று கோலுடன் நடக்க, அம்மா விறகு வெட்டி குடும்பத்தைக் கொண்டு நடத்துகிறாள். தம்பி சீலன் படிப்பை இடைநடுவில் விட்டுவிட்டு அவளுடைய வலது கையாக,

தங்கை செல்லாவும் எங்கே? எப்படி இருக்கிறாளோ? நீளிருள் பொழுதுகளில் கூட இதுவே சிந்தனையாகச் சோர்ந்திருப்பான்.

காலம் உருண்டோடியது தன்மீதே அவனுக்கு வெறுப்பாக, எல்லாவற்றையும் மறக்க படாத பாடெல்லாம் பட்டுக்கொண்டிருந்தான். தனக்குப்  பயித்தியம் பிடித்து விட்டதோ என்றுகூட சிலவேளையில் எண்ணுவான்.

அன்றும் வழமைபோல விடிந்தது. நீண்ட நாட்களின் பின்னர் சிறை அதிகாரியின் வாகனக் கண்ணாடியில் முகம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது அவனுக்கு. அவனால் நம்பவே முடியவில்லை கண்களை வெட்டி மீண்டும் பார்த்தான்.

பெரிய மீசை, நீண்ட தாடி,  சோர்ந்து போன உடம்புடன்,  நீண்ட முடியில் அழுக்குப்படிந்து பிசுபிசுத்துப்போய்,ம்  சிறுவயதில் அவன் சாப்பிட மறுக்கும் போது அம்மா பயமுறுத்தும் 'உம்மாண்டி' கண்ணாடிக்குள் இருந்து பயமுறுத்த மறுபடியும் அவனுக்குள் அம்மாவின் நினைவு எட்டிப்பார்த்தது.


அக்டோபர் 20, 2020

பிரியாவிடை


நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே  இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப்  போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல்,  மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது.  

 

அந்தப் பிரபலமான தொழிற்சாலையில் என்ஜினியரிங் மானேஜராகச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. மிகவும் புகழ் போன கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கம்பெனி அது. அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்குக் கிளம்பி விடுவது வழக்கம். இந்தப் புதிய பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து என் வீட்டு அலாரம் கொஞ்சம் வேகமாகவே செயற்பட ஆரம்பித்திருந்தது. 

 

இந்த ஒருவருட காலத்தில் குறைந்தது ஒரு பத்துப் பேரையாவது புதிதாக நேர்காணல் செய்து என் குழுவில் பணிக்கு அமர்த்தியிருப்பேன். ஆனால் முதல் முறையாக இந்த வாரம் ஒருவருக்குப் பிரியாவிடை அளிக்கப் போகிறேன் என்பதை நினைக்க மனம் படபடப்பாக இருந்தது. 

 

கரோலின் பூர்வீகம் ஜப்பான். வயதுக்கும் தோற்றத்துக்கும் தொடர்பே இல்லாமல் மிகவும் உயர்ந்த, அழகிய தோற்றத்தில் மேக்கப் இல்லாமலே பளபளக்கும் சிரித்த முகம் அவளது. கராத்தேயில் பிளாக் பெல்ட் எடுத்திருப்பதாக ஒருதடவை சொல்லியதாக ஞாபகம். 

 

அவளின் கணவன் ஜேம்ஸ் இவளுக்கு இரண்டாவது கணவன். இவள் அவனுக்கு மூன்றாவது மனைவி. ஜேம்ஸைப் போலவே அவளின் முன்னைய கணவனும் அமெரிக்கக்காரன்தான்.

 

இந்தக் கம்பெனியில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் அனுபவசாலி. அறுபத்தைந்து வயதிலும் துடிப்பாக வேலை செய்யக் கூடிய ஒரு புத்திக் கூர்மையான என்ஜினீயர். அவளுக்கு நிகரான ஒருவரை உருவாக்கக் குறைந்தது ஐந்து வருடங்களாவது தேவை. அப்படி ஒரு இன்ஜினீயரை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்.

 

ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அவளின் ரிட்டயர்மெண்ட் பைல் என் லேப்டாப் பையில் அடைந்து கிடந்தது.


“போனதும் முதல் வேலையாக இன்று அவளுடைய ரிட்டயர்மெண்ட் பைலில் சைன் பண்ண வேணும்”.


“இந்தக் கொரோனா காலத்தில் சரியாக பிரியாவிடை கூடக் கொடுக்க முடியவில்லையே”


என்ற வருத்தம் இன்னொரு பக்கம் வாட்டிக் கொண்டிருந்தது.  

 

சந்திச் சமிக்கை விளக்கின் சிவப்பில் நின்றபோது,


“இன்னும் பதினைந்து வினாடிகளில் பச்சை விழும்”


என்பது புரிந்தது. பச்சை விளக்கு விழுந்ததும் காரின் வேகத்தைக் கூட்டினேன். ஒரு அடிக்குமேல் குவிந்திருந்த பனியில் சிக்கிச் சில்லுகள் 

 

“ஸ்...ச்…” 

 

எனச் சத்தமிட்டபடி முக்கி மீண்டும் வலுப் பெற்றன. ஸ்டேரிங் வீலை மிகவும் மெதுவாகச் சுற்றிக் கார் போகும் போக்கில் விட்டேன். 

 

“பிரேக் பிடிக்காதே” 

 

அடிக்கடி காலுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தது புத்தி. மெதுவாக… மிகவும் மெதுவாக ஸ்டேரிங் வீலை இடது பக்கம் திருப்பி எனது பாதைக்கு விட்டேன். 

 

அதிகாலைவேளை, பனிப்பொழிவு நாள் என்பதால் என்னையும் பனியையும் தவிர வீதியில் அந்த நேரத்தில் யாருமே இருக்கவில்லை. வீதி ஓரளவுக்கு வெறிச்சோடிப் போய் இருந்தது என்றே சொல்ல வேண்டும். 

 

வலமும் இடமுமாகச் சுழன்று கழைத்துப்போன வைப்பர் இறுகிக்,


“கிரீச்... கிரீச்…”


என்ற உரசலுடன் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டு நிண்டது. உறைபனியை உருகவைக்கும் திரவத்தை இரண்டு மூன்று தடவை கண்ணாடியில் பீச்சியடித்து மீண்டும் வைப்பரை இயக்கினேன். மிகவும் மிருதுவாக இடமும் வலமுமாகச் சாமரம் வீசிக் கொண்டிருந்தது. 

 

கண்ணைக் கூர்மையாக்கியபடி  பனிப் பொழிவால்  மூடுவதும் விழிப்பதுமாக இருக்கும் கண்ணாடியினூடே வீதியை உற்று நோக்கியபடி காரைச் செலுத்திக் கிட்டத்தட்ட ஒருமணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் ஒருவாறாக கம்பெனியின் பார்க்கிங்கில் காரைப் பார்க் பண்ணியபோதுதான்,

 

“அட மடப்பயலே ஸ்னோ பூட்ஸை மறந்துபோய் விட்டிட்டு வந்திட்டாயேடா”


என்று பொறித் தட்டியது.  அவசரத்தில் வழமையான சப்பாத்தைப் போட்டுக் கொண்டு வந்து விட்டேன் என்பது அப்போதுதான் புரிந்தது. 

 

பனியில் காலை எடுத்து வைத்தபோது உறைந்து போயிருந்த பனிக்கு மேல் குவிந்திருந்த புதிய பனியில் கால் புதைந்து சறுக்கியது. இன்னொரு பக்கம் காலுறைகள் நனைந்து பாதங்கள் விறைப்பெடுத்தன.

 

மெதுவாக அடிமேல் அடிவைத்துத் தவளாத குறையாய்க் கம்பெனியின் பாதுகாப்புக் கதவில் உள்நுழைவு அட்டையைத் தொட்டபோது கதவு தானாகத் திறந்து கொண்டு


“உள்ளே வா”


என்பது போல ஒற்றைக் காலில் நின்றது. 

 

“கவனம் வெளியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்”


ஒரு பெண்ணின் மென்மையான குரல் ஆங்கிலத்தில் ஒலித்து ஓய்ந்ததும் கதவு தானாக மூடிக் கொண்டது. 

 

காலையில் இருந்து மத்தியானத்துக்கு இடையில் இரண்டு மூன்று மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியதாயிற்று. இதற்கிடையில் ஜூம் மீட்டிங், டீம்ஸ் மீட்டிங் என்று HR உடன் இரண்டு ஒன்லைன் மீட்டிங்குகள். சனி ஞாயிறு கிடைத்த ஓய்வு எல்லாம் கூட்டிக் கழித்துத் திங்களில் வேலையாக மாறிவிடுவதால், எனக்கு இந்தத் திங்கள் கிழமைகள் பிடிக்காமலே போய்விட்டன.

 

கையெழுத்துப் போட்டு வைத்திருந்த கரோலின் பைல் மேசையில் இருந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தது.


“சாப்பிட்டு முடித்தபின் இதை ஸ்கான் செய்து ஈமெயிலில் HRக்கு அனுப்ப வேணும். அதுக்கு முதல் கரோலிடம் போன் பண்ணி உறுதிப்படுத்த வேணும்”


மனதில் நினைத்தபடி சாப்பிட்டு முடித்த போது கைப்பேசி அலறியது.

 

“ஹல்லோ…”

 

“உங்களை மீட் பண்ண ஒரு பத்து நிமிடம் தருவீர்களா?”


மறு முனையில் கரோல் பேசினாள்.

 

“ஆம் ஒரு மணிக்கு வாருங்கள்”


சொல்லி விட்டு அவளுடைய பைலை எடுத்து ஸ்கேன் செய்து முடித்த போது,

 

“உள்ளே வரலாமா…”


கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள். கருப்பு பான்ட், கறுப்புச் சட்டை, கறுப்புக் கோட், அரையடி உயரக் குதி போட்ட காலணி. அவள் உயரத்துக்கு என்னால் நிமிர்ந்து பார்க்க முடியாது. 

 

“உக்காருங்கள்…” என்றேன். 

 

“முதலில் மன்னியுங்கள்... நான் உங்களுக்கு நிறைய வேலை குடுத்திட்டேன். ஆனால் இப்ப ஒரு சின்னச் சிக்கல்” 

 

“சொல்லுங்கள்”

 

“பேமிலி ப்ரோப்ளம்... நான் இப்ப ரிட்டயர்மெண்ட் செய்யிற ஐடியா இல்லை... என் முடிவை மாற்றி விட்டேன்”

 

“என்னது?” 

 

வெள்ளிக்கும் திங்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை என்னால் உணர முடியவில்லை. அவளே தொடர்ந்தாள்.

 

“எனக்கும் என் கணவருக்கும் இடையில ஒரு சின்ன முரண்பாடு. இந்தக் கொரோனா காலத்தில அவர் நிறையவே மாறிட்டார். நாங்கள் பிரியிறது எண்டு முடிவெடுத்திட்டோம். எங்கட ரெண்டு பேரின்ர பெயரில வீடு இருக்கிறதால அத விக்கப் போட்டிருக்கிறோம். அது வித்த பிறகு நான் என் பெயரில ஒரு வீடு வாங்க வேணும் வேலையை விட்டால் லோன் எடுக்க கஷ்டம். அதனால இன்னும் ஒரு ரெண்டு வருசம் வேலை செய்யலாம் என்று இருக்கிறேன்”


அவள் சொல்லச் சொல்ல மேசையில் இருந்த அவளது பைல் என்னைப் பார்த்துக் கேலியுடன் சிரிப்பது போல இருந்தது.



அக்டோபர் 13, 2020

கடவுளின் குழந்தை




முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும்  மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான்.

இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக  மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. 

***

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவள் ஒரு சிறு குழந்தை பனிப்பொழிவு குறைந்த இந்த இரண்டு மாதத்தில் இருந்து அந்தச் சிறு மழலையின் கையசைப்புக்காகக் காத்திருக்கிறான். 

அவளுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம். கடந்த வருடம் பனிப் பொலிவுக்கு முன்னர் ஒரு மாலைநேரக் கையசைப்புடன் கலைந்து போனது அந்தச் சிறு பூவின் கையசைப்பு.

 நேற்று,  இன்று, நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அந்தப் பிஞ்சுக் கைகளின் அசைவு இந்தப் பின்பனி காலத்தில் இன்னும் கிடைக்கவில்லை. 

அவர்கள் எங்காவது குடிபெயர்ந்து விட்டார்களா? அப்படியாயின் அங்கு தெரிந்த வெளிச்சம்?  நகரும் உருவங்கள்?  பல கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தன.

“சிலவேளை புதிதாக யாரும் குடிவந்திருக்க வாய்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்காது.” மனம் ஏனோ ஏற்க மறுத்தது.

அவளது தாயும் தந்தையும் வழமையாக வெயில் கால மாலைப் பொழுதில் வீட்டின் முன் முற்றத்தில் மது அருந்தியபடியோ அல்லது புகைத்த படியோ ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அவள் சைக்கிள் ஓட்டி அல்லது பந்தடித்து விளையாடிக் கொண்டிருப்பாள். பல வேளைகளில் தாயும் தந்தையும் அவளுடன் விளையாடியும் பார்த்திருக்கிறான். பெரும்பாலான மாலை வேளைகளில் அந்த வீட்டின் கார் பாதையில் யாரும் உள்நுளையாதபடி தற்காலிகமாக தடுப்பு வேலி போடப்பட்டிருக்கும். இப்போது எதுவும் அங்கில்லை. எல்லாம் வழமைக்கு மாறாகவே இருந்தது.  

அவனால் சரியாக உறங்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அந்தக் கையசைப்பு,  சிரிப்பு,  எல்லாம் அவனை வட்டமிட்டபடியே இருந்தது. 

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சிக்கு போவதுபோல் அந்த வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான். 

தூண்டில் போடுபவர்கள் ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். மின்னேசோட்டாவின் ஒரு சிறு நகரின் அழகிய ஆற்றங்கரையை அண்மித்ததாகத்தான் அந்த வீடு இருந்தது.

***

இந்த இடத்துக்கு ஆரம்பத்தில் அவன் குடிபுகுந்த போது அவனுக்கு அந்த ஊரில் யாரையுமே தெரியாது. ஊருக்கு புதியவனாக இருந்தமையால் அவனுடன் அமெரிக்கர்களுக்கான அறிமுகம் கிடைக்க நாளானது. அவன் அடிப்படையில் ஒரு இந்து சமயத்தவனாக இருந்தாலும் பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளை அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலேயே கழிப்பதனால் நாளடைவில் பலரின் அறிமுகம் அவனைத்தேடி வந்தது.

“குட்மோர்னிங் மிஸ்டர் சேகர் ”

சத்தம் வந்த திசையில் பார்த்தான். மிகவும் அறிமுகமான அந்த நபர். 

“குட்மோர்னிங் ஆமிசேர்” 

அவர் ஒரு காலத்தில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியமையினால் அவருக்கு அப் பெயரை அவன் சூட்டியிருந்தான்.

அடிக்கடி தேவாலயத்தில் சந்திக்கும் மிகவும் முக்கியமானவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பெயர் “ராயன் ரொபலிங்க்” எல்லோரும் அவரை “ராயன்” என்று அழைப்பர்கள். மிகவும் மரியாதைக்குரிய நபராக எல்லோராலும் மதிக்கப்படுபவர் அவர்.

“கிட்டவா இருக்கிறீர்கள்?” 

“ஆம் அதுதான் என்வீடு”

மூன்றாவது வீட்டைச் சுட்டிக் காட்டி, “அதுதான் என் வீடு நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாருங்கள் பேசலாம்” என்றார் ராயன். 

அவனுக்கு பிரகாசமான ஒரு ஒளி பிறந்தது. அவன் யாரைப் பற்றி அறிய வேண்டி வந்தானோ அவர்களின் வீடும் மிஸ்டர் ராயன் வீடும் எதிரெதிரே இருந்தது.

“நன்றி” சொல்லிவிட்டு நிச்சயமாக வருவதாக உறுதியளித்த பின் கையசைத்து விடைபெற்றான்.

***

அன்று வேலைநாள் இல்லையாதலால் மாலையே ஆமிசேரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். நல்லகாலம் அவர் வீட்டிலேயே இருந்தார். 

“உள்ளே வாருங்கள்” மிகவும் பரிவுடன் உபசரித்தார். 

அவர் வீட்டு நாய்களைப் பார்க்கத்தான் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. நம்மூர் மாடுபோல வளர்ந்து கொளுகொளுவென இருந்தது.

“மிகவும் அழகான நாய்கள்” என்று பேச்சைத் தொடங்கினான். “நாய்” என்று சொன்னதும் ஒருகணம் முகம் ஓடிக் கறுத்து என்னவோ மாதிரி ஆனது. 

“இவை இரண்டும் எனது பிள்ளைகள்” என்றார். ஒரு பழுப்பு நிறமான ஆண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்கு ஒன்பது வயது” என்றும் மற்றைய மண்ணிறமான பெண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்குப் பத்து வயது” என்றும் அறிமுகம் செய்தார். 

அப்படியே நாய் பற்றிய பேச்சின் இடையே சிறிது நேரத்தில் ஆமிசேரின் துணைவி சுடச்சுடச் சூப்புடன் வந்தாள். அவளையும் அவன் ஓரிரு தடவை ஆமிசேருடன் தேவாலயத்தில் பார்த்திருக்கிறான். ஆனால் அவளுடன் அவனுக்கான பழக்கம் அதிகமானதாக இருக்கவில்லை. இப்போது எதிர் வீட்டைச் சுட்டிக் காட்டி, 

“அங்கு ஒரு சிறுமி போன வருடம் விளையாடியதாகவும் இந்த வருடம் அவளை அந்த வீட்டில் காண முடியவில்லையே”  ஆமிசேர் இப்போது எதுவும் பேசவில்லை. அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. நீண்ட அமைதிக்குப் பின் அவரின் துணைவி பேசத் தொடங்கினாள். அவள் பேச்சில் ஒரு விதமான கரகரப்பு தொற்றிக்கொண்டது.

அவள் பேசப் பேச அவன் அப்படியே உறைந்து போய் விட்டான். அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்து அந்த பிஞ்சு குழந்தையைப்  பற்றிய விசாரிப்பில் இறங்கவில்லையாதலால் அப்படியே காற்றுப் போன பலூனாகி விட்டான்.

“கடவுளே நீ இத்தனை கொடுமைக்காரனா?”

“எதற்காக அந்தப் பிஞ்சு உள்ளத்தை உன்னிடம் அழைத்தாய்?’’

“அவளைப் பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? பல கேள்விகளைத் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். 

“அச் சிறு பிஞ்சு புற்றுநோய் வந்து இறந்த நாளில் இருந்து அவளின் தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியில் போவதும் இல்லை. யாருடனும் பேசுவதும் இல்லை. அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமே தங்கள் குழந்தையைக் கொன்றதை அறிந்து. குற்ற உணர்வால் துடித்துப்போய் விட்டனர். இப்போது தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்’’

மிஸ்ஸிஸ் ராயன் பேசி முடிக்க, கண்களில் வழிந்த நீரை கையால் துடைத்தபடி, எதுவும் பேச முடியாதவனாக அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

***

ஒரு கோப்பை தேநீருடன் காலை உணவையும் முடித்துக் கொண்டு வேலைக்கு போகத் தயாரானான். அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்தச் சிறு மழலையின் அழகிய முகம் பட்டெனத் தோன்றி மறைவதால் இப்போது அவன் அந்த வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்ப்பது கூடக் கிடையாது.

அன்று மாலை அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அச் சிறு பிஞ்சின் தாயும் தந்தையும் அவன் வீட்டின் முன் தெருவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 

அவள் கிட்டத்தட்ட நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. கணவனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

 “கடவுள் இருக்கிறான்” 

மனதுக்குள் நினைத்தபடி உள்ளே சென்று மறைந்தான்.


செப்டம்பர் 03, 2020

அப்பிள் பழமும் அம்முக் குட்டியும்

அமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான். 


அப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. 


சின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்த்தால் போதும் என்று நினைப்பான். யாழ்ப்பாண ரவுணுக்கு போறதெண்டால் அவனுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ அலுவல் இருக்குதெண்டு நினைக்கலாம். ரவுணுக்குப் போற போதெல்லாம் அவுஸ்ரேலியா அப்பிள்… அவுஸ்ரேலியா அப்பிள்…  எண்டு கூவிக் கூவி விப்பாங்கள். 


“அது கூடாத பழம்… மெழுகு பூசித்தான் விப்பாங்கள்…நீ சாப்பிடக் கூடாது ராசா” 


என்றபடி தாயோ கொய்யாப்பழக் கடையின் முன்னே போய் நிப்பாள். அவனுக்கோ அப்பிள் பழத்துக்கு ஆசைப்பட்டு ஒரு கொய்யாப் பழத்துடன் முடிந்து போகும் அன்றைய நாள்.


அமெரிக்காவில வீடு வாங்கி வீட்டுக்குப் பின் பக்கம் அப்பிள் மரம் நட்டு ஒரு பழம் எண்டாலும் புடுங்கிச் சாப்பிட்டிட வேணும் என்ற ஆசை இப்ப நிறைவேறப் போகுது என்பதில் அவனுக்கு நல்ல சந்தோசம்.


ஒரு அப்பிள் இந்த வருசம் பூக்கத் தொடங்கியதும் மனைவி சொல்லி விட்டாள் “இதுதான் பொம்பிளை அப்பிள் இது எனக்குத்தான் சொந்தம்” என்றவள் எந்த அறிகுறியும் இல்லாமல் அப்படியே நெடுத்துக் கொண்டு போன மரத்தைக் காட்டி “அதுதான் உங்கடை…” என்று முடிவாய் சொல்லி விட்டாள்.


அவளுக்கு அப்பிளைக் காயாகப் பிடுங்கி அதைத் துண்டுகளாக வெட்டி உப்புத் தூளில் தொட்டுச் சாப்பிடுவதெண்டால் அலாதிப் பிரியம். 


அப்பிள் பூக்கத் தொடங்கிய போதே நாற்பது டொலருக்கு மருந்து வாங்கி வந்து வைத்து விட்டான். பூக்கேக்கை, பிஞ்சு பிடிக்கேக்குள்ள, காய்க்கேக்கை எண்டு மூண்டு முறை மருந்தடிச்சு பாத்தாச்சு உந்தப் பூச்சித் தொல்லை மட்டும் குறையவில்லை.


ஊரிலை முற்றத்து மாதுளை காய்த்தபோது படிக்கிற புத்தகத்தைக் கிழித்து மாதுளங்காய்க்குச் சுத்திக் கட்டிப் பாதுகாத்த மாதிரி பேப்பேரை சுற்றிக் கட்டிப் பார்த்தான். 


இந்த அப்பிளைக் கட்டிக் காக்கிறது அவனுக்குப் பெரிய கஸ்ரமாக இருந்தது. ஒன்றன் பின் ஒன்றாகக் கொட்டி பதினோரு அப்பிள் காய்ச்ச இடத்தில இப்ப நாலு அப்பிள் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தது. “கன்னி அப்பிள் கனக்கக் காய்க்காது…” என்றார் அவனின் தெரிந்த நண்பர் ஒருவர்.


சின்ன வயசில ஒருநாள் பள்ளிக்கூடத்தில படிக்கேக்கை டீச்சர் சொல்லித்தான் தெரிஞ்சது, அப்பிள் பழம் மரத்தில இருந்து விழுறத வைச்சுத்தான் ஐசாக் நியூட்டனே ஈர்ப்புக் கொள்கையைக் கண்டு பிடிச்சார் எண்டு. 


அவனும் பெரிய விண்ணன் போல “அணில் கடிச்ச அப்பிளோ… காகம் கொந்தின அப்பிளோ டீச்சர்…” என்று கேட்டு விட்டான். 


டீச்சருக்கு அண்டைக்கு வந்த கோவத்துல பிரம்பால விட்டா ரெண்டு தொடையில அப்பிடியே அப்பிள் பழம் போல சிவப்பாய் ரெண்டு கோடு. அண்டைக்கு முடிவெடுத்தவன்தான் எப்பவாவது ஒரு நாளைக்கு தானும் ஆப்பிள் மரத்துக்கு கீழ படுத்திருந்து ஒரு தேத்தண்ணியாவது குடிக்க வேணும் எண்டு.


இன்னும் கொஞ்ச நாளிலை அவனுடைய கனவு நிறைவேறப் போற ஆசையில கோடைகால மலிவு விலைக்குப் போட்டிருந்த ஒரு சாய்மனைக் கதிரையை வாங்கி வந்து அப்பிள் மரத்துக்கு கீழே போட்டு பின்னேர நேரத்தில் வேலையால் வந்ததும் அப்பிள் மரத்தின் கீழே படுத்து இளைப்பாறத் தொடங்கினான். 


இன்றும் வளமை போலத் தேநீர் கோப்பையுடன் வந்து கதிரையில் இருந்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு அப்பிள் காயைக் காணவில்லை. மூன்று காய்கள் மட்டுமே பாதி சிவப்பாகவும் பாதி பச்சையாகவும் பளுப்புக்கும் வெளுப்புக்கும் நடுக் கட்டத்தில மின்னிக் கொண்டிருந்தன. 


“என்னதான் காவல் காத்தாலும் இந்த வருசம் ஐசாக் நியூட்டன் ஆக முடியாது போல இருக்குது...” என்று நினைத்துக் கொண்டு தேத்தண்ணி குடிச்ச கப்பை கொண்டு போய்ச் சிங்கிலை வைத்து விட்டு வந்து கதிரையில் இருந்தபோது ஒரு தட்டில் துண்டுகளாக நறுக்கப்பட்ட அப்பிளுடன் மிளகாய்த் தூளும் உப்பும் கலந்து எடுத்து வந்து 


“அப்பா எங்கடை அப்பிள் மரத்தில புடுங்கினது… சாப்பிடுங்கோ…” என்று நீட்டினாள் மகள். தாயைப் போலவே அவளுக்கும் அப்பிளைத் துண்டுகளாக நறுக்கி உப்புத் தூளில் தொட்டுச் சாப்பிடுவதில் அப்படி ஒரு விருப்பம். எதுவும் சொல்லாமல் நானும் ஒரு துண்டு அப்பிளை எடுத்து உப்புத் தூள் பிரட்டிச் சாப்பிடத் தொடங்கினேன். 


ஆகஸ்ட் 17, 2020

துணை

ந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத அதே தோற்றம். 


உடைய மாற்றிய பின் எல்லா உடுப்புக்களையும் வோசரில் தோய்க்கப் போட்டு விட்டுத் திரும்பவும் கைகளைக் கழுவினாள். பால் விட்டு நிறையச் சாயம் போட்டு ஒரு தேத்தண்ணி ஊத்திக் கொண்டு பொட்டுக் கடலை டப்பாவுடன் பாடியோவுக்குப் போனாள். 


O/L முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தவளை சரியாக இருபத்து வருடங்களுக்கு முதல் நல்ல சம்மந்தம் என்று 17 வயசில தாயும் தகப்பனும் கலியாணம் பேசி 28 வயசு மாப்பிள்ளையிடம் வெளிநாட்டுக்கு அனுப்பின போது அவள் நினைத்திருக்கவில்லை இப்பிடியெல்லாம் வெளிநாட்டிலை கஸ்ரப்பட வேண்டி வரும் என்று.


தேத்தண்ணியை இரண்டு மூன்று தடவைகள் ஊதிய பின் உறிஞ்சியவள் பொட்டுக் கடலையைக் கரண்டியால் அள்ளி வாயில் போட்டபடி இளையராசாவை காதுக்குள்ளெ தாலாட்ட விட்டபடி பாடியோவில் உள்ள சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தாள். 


வழமைபோல அந்த ஒற்றை முயல் வந்து பொட்டுக் கடலைக்காகக் காத்திருந்த போது. ஒரு கரண்டி பொட்டுக் கடலையை அள்ளி முயலுக்கெனவே அவள் வாங்கி வைத்திருந்த தட்டில் போட்டு விட்டு அது சாப்பிடுவதை ரசித்தபடி இருந்தாள். 


கலியாணமாகி வந்த புதிதில் ஒரு குட்டிப் பெண்ணாக இங்கு வந்தபோது அவளது உலகம் முன்பின் அறியாத அவளின் கணவனை மட்டுமே சுற்றியிருந்தது. 


மொழிதெரியாத ஊரில் யாரையும் அவள் அறியாள். கணவன் காட்டும் முகங்களையே உறவென நம்பினாள். ஆறு மாதங்களில் முதல் கரு அழிந்து... பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தபோது அவனைச் சுற்றிய அவளது உலகம் பின்னப்பட்டது. 


மகன் பல்கலைக் கழகம் போன பிறகு, வேலை… வீடு கூட்டிப் பெருக்குதல் என அவளுக்கு எல்லாவற்றையும் தனிமையில் செய்யவதே ஒரு போராட்டமாக இருந்தது. 


இந்த ஒரு அறை உள்ள  அப்பார்மெண்ட்டுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகின்றது. அவள் இங்கு குடி வந்து ஒரு நாலு மாதத்திலிருந்து அந்தப் பெட்டை முயலும் அவளின் நட்பு வட்டத்துக்குள் வந்து சேர்ந்தது. 


முதல் பழக்கத்தில் முயல் அவளுக்குக் கிட்ட வரப் பயந்தது. ஊரிலை காட்டு முயலை வேட்டையாடிக் காதிலை பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போறத்தைப் பார்த்திருக்கிறாள். 


அந்த முயல் “சூ” எண்டால் கண்ணிமைக்குறதுக்குள்ள ஒரு கிலோ மீட்டர் தாண்டிடும் ஆனால் இந்த முயல் “சூ” எண்டால் ரண்டடி தள்ளிப் போய் நிண்டு திரும்பிப் பாக்கும். அதுக்குத் தெரியும் தன்னை ஆரும் அடிக்க முடியாது எண்டு. இந்த முயலைப் பார்க்கும் போதெல்லாம் “முயலாய் பிறந்தாலும் வெளிநாட்டிலை பிறக்க வேணும்...” எண்டு அடிக்கடி நினைப்பாள். 


முதலில் அவள் “சூ” என்று சொன்ன போது காதுகளை அகல விரித்து முன்னங்கால் ரெண்டையும் தூக்கி வைச்சுக் கொண்டு அவளைப் பாத்ததுமே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 


“இப்பிடியெல்லாமா முயல்கள் இருக்கும்…” என மனதுக்குள் வியந்தாள். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் வேலையால வந்ததும் வராததுமாகப் பொட்டுக் கடலையும் தேத்தண்ணியுமாகப் பாடியோவுக்கு வந்து விடுவாள். 


அவள் வேலையால் வரும் நேரம் கூட அந்த முயலுக்குத் தெரிந்திருந்தது. அவளை அந்த வீட்டில் தேடும் ஒரே உயிர் அந்த முயல்தான். 


மகனிடம் இருந்து வந்த ‘வாட்ஸ் அப்’ குறுந் தகவல்களை அசைப்போட்ட படி முயலை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அந்த முயலுக்கும் இடையில் பாஷைகள் இல்லாமலேயே ஒரு விதமான தொடர்பாடல் நிகழ்ந்தது.


முயலுக்கு அரை மணி நேரம்தான்  அவளுடன் பேசப் பிடிக்குமோ என்னவோ வழமை போலவே சரியாக  அரை மணித்தியாலங்களுக்குள் அது வந்த வழியே போய் விட்டது. 


அவளும் இளைய ராஜாவுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு மகனுக்கு போன் எடுத்தாள். அவனுக்கும் 20 வயது முடிந்து விட்டது. பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக விடுதியில் தங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. 


எப்போதாவது கிடைக்கும் விடுமுறைக்குத் தாயைப் பார்க்க வருவதுடன் சரி. ஆனால் ஒவ்வொருநாளும் இரவு என்ன வேலை இருந்தாலும் தாய் டெலிபோனில் கதைக்க வேணும் என்பது அவனது கட்டாய உத்தரவு. 


இலங்கை நேரம் சரியாக காலமை எட்டு மணிக்கு ஊரில் உள்ள தாய்க்குப் போன் எடுத்தாள். இதுவும் அன்றாட நிகழ்ச்சி நிரலில் வருவதுதான். மறுமுனையில்...


“ என்ன பிள்ள செய்யிறாய்…” 


“நான் இப்பதான் வேலையால வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு இருக்கிறேன்…”


“சாப்பிட்டியே பிள்ள…”


“இல்லையம்மா இனித்தான் சாப்பிட வேணும்…”


அடுத்ததாக என்ன என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் இதே பல்லவி... இதே சரணம் தான்.


“என்ன பிள்ள… எத்தின நாளைக்குத்தான் இப்பிடியே தனிய இருப்பாய்…”


“அம்மா உங்களுக்குக் கனக்க முறை சொல்லிட்டேன்… இனி உதைப்பற்றி என்னோட கதைக்க வேண்டாம் எண்டு…”

“என்ன பிள்ளை இப்பதான் நாப்பது வயசு… இன்னும் எத்தின நாளைக்குத்தான் தனிய இருக்கப் போறியா…” 


மறு முனையில் தாயின் விம்மல் சத்தம் கேட்டது. “ தாய் அழத் தொடங்கி விட்டாள் என்பது தெரிந்ததும், “சரி அம்மா நான் நாளைக்கு எடுக்கிறேன்…” என்றபடி தொடர்பைத் துண்டித்தாள். 


மகனுக்கு ஏழு வயதாக இருந்த போது கணவன் தன்னை விட்டுட்டு இன்னொருத்தியோட போனபோது, இன்றுவரை மனம் தளராமல் ஒரு பக்கம் மகனையும் வளர்த்தபடி இன்னொரு பக்கம் வேலை செய்து வைராக்கியமாக வாழ்ந்து வருகிறாள். 


கணவன் விட்டிட்டுப் போன இந்தப் பதினைந்து வருஷத்தில் அவளின் வாழ்க்கை எல்லாம் மகனைச் சுற்றியே இருந்தது. மகன் பல்கலைக் கழகம் சென்ற நாளில் இருந்து அவளுக்கு எதையோ வாழ்வில் இழந்ததைப் போல ஓர் உணர்வு. என்னதான் மகனுடனும் தாயுடன் போனில் கதைத்தாலும் எதையோ ஒன்றைப் பறி கொடுத்ததைப் போல உணர்ந்தாள். 


வளமை போலவே மறுநாள் வேலையில் இருந்து வந்தவள் தேத்தண்ணிக் கப்புடன் பொட்டுக் கடலையையும் எடுத்துக் கொண்டு பாடியோவுக்குப் போனாள். நீண்ட நேரமாகியும் முயல் வரவில்லை. 


ஏமாற்றாததுடன் வழமையான வேலைகளில் மூழ்கிவிட்டாள். வெள்ளி… சனி… இப்படியே இரண்டு நாட்களும் முயல் வராமல் போகவே அருகில் வழமையாக முயல் இருக்கும் சிறிய பூச் செடிகளுக்குள்… புல் வெளியில்… பற்றைகளில் தேடினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் முயலைக் காண முடியவில்லை.


“பாவம் தனி முயல்… ஆர் தேடுவார்… என்னைப் போலவே… இப்பிடித்தானே நானும் ஒருநாள்…” பொட்டுக் கடலை டப்பாவைத் தூக்கி மேசையில் “டமார்” என்று வைத்தவள் யோசித்தபடி விறாந்தையிலேயே நித்திரையாகி விட்டாள். 


தேத்தண்ணிக் கப்பும் பொட்டுக் கடலையுமாகத் திங்கட் கிழமை சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி இருந்தாள். தேத்தண்ணியை உறிஞ்சியபடி புல்வெளியையே பார்த்திருந்தாள் இன்றும் முயல் வரவில்லை. 


செவ்வாய் கிழமை பின்னேரம் பொட்டுக் கடலையை எடுக்க மனமில்லாமல் தேத்தண்ணிக் கப்புடன் மட்டும் போய் இளையராசாவைத் தட்டி விட்டு கதிரையில் சாய்ந்தவளுக்கு அவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை. 


முயல் மெல்ல மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தது. காதுகளை விரித்து முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி அவளைப் பார்த்தது. ஓடிப் போய் பொட்டுக் கடலை டப்பாவைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள். 


இதுவரை காலமும் தனிமையாக வந்த முயல் இன்று இன்னொரு ஆண் முயலையும் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தது. 


“ஒருவேளை அம்மா சொல்லுறது சரிதானா…” என்று மனதுக்குள் நினைத்தபடி பொட்டுக் கடலை டப்பாவைத் திறந்து தட்டில் கொட்டினாள். கலியாணமாகி வந்த புதுமணத் தம்பதிகளுக்கு விருந்தாக.