ஆகஸ்ட் 17, 2020

துணை

ந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத அதே தோற்றம். 


உடைய மாற்றிய பின் எல்லா உடுப்புக்களையும் வோசரில் தோய்க்கப் போட்டு விட்டுத் திரும்பவும் கைகளைக் கழுவினாள். பால் விட்டு நிறையச் சாயம் போட்டு ஒரு தேத்தண்ணி ஊத்திக் கொண்டு பொட்டுக் கடலை டப்பாவுடன் பாடியோவுக்குப் போனாள். 


O/L முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தவளை சரியாக இருபத்து வருடங்களுக்கு முதல் நல்ல சம்மந்தம் என்று 17 வயசில தாயும் தகப்பனும் கலியாணம் பேசி 28 வயசு மாப்பிள்ளையிடம் வெளிநாட்டுக்கு அனுப்பின போது அவள் நினைத்திருக்கவில்லை இப்பிடியெல்லாம் வெளிநாட்டிலை கஸ்ரப்பட வேண்டி வரும் என்று.


தேத்தண்ணியை இரண்டு மூன்று தடவைகள் ஊதிய பின் உறிஞ்சியவள் பொட்டுக் கடலையைக் கரண்டியால் அள்ளி வாயில் போட்டபடி இளையராசாவை காதுக்குள்ளெ தாலாட்ட விட்டபடி பாடியோவில் உள்ள சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தாள். 


வழமைபோல அந்த ஒற்றை முயல் வந்து பொட்டுக் கடலைக்காகக் காத்திருந்த போது. ஒரு கரண்டி பொட்டுக் கடலையை அள்ளி முயலுக்கெனவே அவள் வாங்கி வைத்திருந்த தட்டில் போட்டு விட்டு அது சாப்பிடுவதை ரசித்தபடி இருந்தாள். 


கலியாணமாகி வந்த புதிதில் ஒரு குட்டிப் பெண்ணாக இங்கு வந்தபோது அவளது உலகம் முன்பின் அறியாத அவளின் கணவனை மட்டுமே சுற்றியிருந்தது. 


மொழிதெரியாத ஊரில் யாரையும் அவள் அறியாள். கணவன் காட்டும் முகங்களையே உறவென நம்பினாள். ஆறு மாதங்களில் முதல் கரு அழிந்து... பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தபோது அவனைச் சுற்றிய அவளது உலகம் பின்னப்பட்டது. 


மகன் பல்கலைக் கழகம் போன பிறகு, வேலை… வீடு கூட்டிப் பெருக்குதல் என அவளுக்கு எல்லாவற்றையும் தனிமையில் செய்யவதே ஒரு போராட்டமாக இருந்தது. 


இந்த ஒரு அறை உள்ள  அப்பார்மெண்ட்டுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகின்றது. அவள் இங்கு குடி வந்து ஒரு நாலு மாதத்திலிருந்து அந்தப் பெட்டை முயலும் அவளின் நட்பு வட்டத்துக்குள் வந்து சேர்ந்தது. 


முதல் பழக்கத்தில் முயல் அவளுக்குக் கிட்ட வரப் பயந்தது. ஊரிலை காட்டு முயலை வேட்டையாடிக் காதிலை பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போறத்தைப் பார்த்திருக்கிறாள். 


அந்த முயல் “சூ” எண்டால் கண்ணிமைக்குறதுக்குள்ள ஒரு கிலோ மீட்டர் தாண்டிடும் ஆனால் இந்த முயல் “சூ” எண்டால் ரண்டடி தள்ளிப் போய் நிண்டு திரும்பிப் பாக்கும். அதுக்குத் தெரியும் தன்னை ஆரும் அடிக்க முடியாது எண்டு. இந்த முயலைப் பார்க்கும் போதெல்லாம் “முயலாய் பிறந்தாலும் வெளிநாட்டிலை பிறக்க வேணும்...” எண்டு அடிக்கடி நினைப்பாள். 


முதலில் அவள் “சூ” என்று சொன்ன போது காதுகளை அகல விரித்து முன்னங்கால் ரெண்டையும் தூக்கி வைச்சுக் கொண்டு அவளைப் பாத்ததுமே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 


“இப்பிடியெல்லாமா முயல்கள் இருக்கும்…” என மனதுக்குள் வியந்தாள். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் வேலையால வந்ததும் வராததுமாகப் பொட்டுக் கடலையும் தேத்தண்ணியுமாகப் பாடியோவுக்கு வந்து விடுவாள். 


அவள் வேலையால் வரும் நேரம் கூட அந்த முயலுக்குத் தெரிந்திருந்தது. அவளை அந்த வீட்டில் தேடும் ஒரே உயிர் அந்த முயல்தான். 


மகனிடம் இருந்து வந்த ‘வாட்ஸ் அப்’ குறுந் தகவல்களை அசைப்போட்ட படி முயலை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அந்த முயலுக்கும் இடையில் பாஷைகள் இல்லாமலேயே ஒரு விதமான தொடர்பாடல் நிகழ்ந்தது.


முயலுக்கு அரை மணி நேரம்தான்  அவளுடன் பேசப் பிடிக்குமோ என்னவோ வழமை போலவே சரியாக  அரை மணித்தியாலங்களுக்குள் அது வந்த வழியே போய் விட்டது. 


அவளும் இளைய ராஜாவுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு மகனுக்கு போன் எடுத்தாள். அவனுக்கும் 20 வயது முடிந்து விட்டது. பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக விடுதியில் தங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. 


எப்போதாவது கிடைக்கும் விடுமுறைக்குத் தாயைப் பார்க்க வருவதுடன் சரி. ஆனால் ஒவ்வொருநாளும் இரவு என்ன வேலை இருந்தாலும் தாய் டெலிபோனில் கதைக்க வேணும் என்பது அவனது கட்டாய உத்தரவு. 


இலங்கை நேரம் சரியாக காலமை எட்டு மணிக்கு ஊரில் உள்ள தாய்க்குப் போன் எடுத்தாள். இதுவும் அன்றாட நிகழ்ச்சி நிரலில் வருவதுதான். மறுமுனையில்...


“ என்ன பிள்ள செய்யிறாய்…” 


“நான் இப்பதான் வேலையால வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு இருக்கிறேன்…”


“சாப்பிட்டியே பிள்ள…”


“இல்லையம்மா இனித்தான் சாப்பிட வேணும்…”


அடுத்ததாக என்ன என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் இதே பல்லவி... இதே சரணம் தான்.


“என்ன பிள்ள… எத்தின நாளைக்குத்தான் இப்பிடியே தனிய இருப்பாய்…”


“அம்மா உங்களுக்குக் கனக்க முறை சொல்லிட்டேன்… இனி உதைப்பற்றி என்னோட கதைக்க வேண்டாம் எண்டு…”

“என்ன பிள்ளை இப்பதான் நாப்பது வயசு… இன்னும் எத்தின நாளைக்குத்தான் தனிய இருக்கப் போறியா…” 


மறு முனையில் தாயின் விம்மல் சத்தம் கேட்டது. “ தாய் அழத் தொடங்கி விட்டாள் என்பது தெரிந்ததும், “சரி அம்மா நான் நாளைக்கு எடுக்கிறேன்…” என்றபடி தொடர்பைத் துண்டித்தாள். 


மகனுக்கு ஏழு வயதாக இருந்த போது கணவன் தன்னை விட்டுட்டு இன்னொருத்தியோட போனபோது, இன்றுவரை மனம் தளராமல் ஒரு பக்கம் மகனையும் வளர்த்தபடி இன்னொரு பக்கம் வேலை செய்து வைராக்கியமாக வாழ்ந்து வருகிறாள். 


கணவன் விட்டிட்டுப் போன இந்தப் பதினைந்து வருஷத்தில் அவளின் வாழ்க்கை எல்லாம் மகனைச் சுற்றியே இருந்தது. மகன் பல்கலைக் கழகம் சென்ற நாளில் இருந்து அவளுக்கு எதையோ வாழ்வில் இழந்ததைப் போல ஓர் உணர்வு. என்னதான் மகனுடனும் தாயுடன் போனில் கதைத்தாலும் எதையோ ஒன்றைப் பறி கொடுத்ததைப் போல உணர்ந்தாள். 


வளமை போலவே மறுநாள் வேலையில் இருந்து வந்தவள் தேத்தண்ணிக் கப்புடன் பொட்டுக் கடலையையும் எடுத்துக் கொண்டு பாடியோவுக்குப் போனாள். நீண்ட நேரமாகியும் முயல் வரவில்லை. 


ஏமாற்றாததுடன் வழமையான வேலைகளில் மூழ்கிவிட்டாள். வெள்ளி… சனி… இப்படியே இரண்டு நாட்களும் முயல் வராமல் போகவே அருகில் வழமையாக முயல் இருக்கும் சிறிய பூச் செடிகளுக்குள்… புல் வெளியில்… பற்றைகளில் தேடினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் முயலைக் காண முடியவில்லை.


“பாவம் தனி முயல்… ஆர் தேடுவார்… என்னைப் போலவே… இப்பிடித்தானே நானும் ஒருநாள்…” பொட்டுக் கடலை டப்பாவைத் தூக்கி மேசையில் “டமார்” என்று வைத்தவள் யோசித்தபடி விறாந்தையிலேயே நித்திரையாகி விட்டாள். 


தேத்தண்ணிக் கப்பும் பொட்டுக் கடலையுமாகத் திங்கட் கிழமை சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி இருந்தாள். தேத்தண்ணியை உறிஞ்சியபடி புல்வெளியையே பார்த்திருந்தாள் இன்றும் முயல் வரவில்லை. 


செவ்வாய் கிழமை பின்னேரம் பொட்டுக் கடலையை எடுக்க மனமில்லாமல் தேத்தண்ணிக் கப்புடன் மட்டும் போய் இளையராசாவைத் தட்டி விட்டு கதிரையில் சாய்ந்தவளுக்கு அவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை. 


முயல் மெல்ல மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தது. காதுகளை விரித்து முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி அவளைப் பார்த்தது. ஓடிப் போய் பொட்டுக் கடலை டப்பாவைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள். 


இதுவரை காலமும் தனிமையாக வந்த முயல் இன்று இன்னொரு ஆண் முயலையும் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தது. 


“ஒருவேளை அம்மா சொல்லுறது சரிதானா…” என்று மனதுக்குள் நினைத்தபடி பொட்டுக் கடலை டப்பாவைத் திறந்து தட்டில் கொட்டினாள். கலியாணமாகி வந்த புதுமணத் தம்பதிகளுக்கு விருந்தாக. 


ஆகஸ்ட் 04, 2020

அழகிய ஐரோப்பா - 8

அழகோ அழகு


மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகி இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளம் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி. 

தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மினிஸ்டர் பிரிஜ் என்ற இந்தப் பாலம். 
லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான பாலங்களில் இதுவும் ஒன்று. பிரித்தானிய பார்லிமென்ட், குயின் எலிசபெத் ஹால் என முக்கியமான இடங்களின் மையப் பகுதியாக இது உள்ளது. 
இங்கிருந்து லண்டன் பிரிஜ் போவதற்கு பல வழிகள் உள்ளன நாங்கள் கப்பலில் போவதென முடிவெடுத்தோம். 

அதைப் படகென்பதா கப்பல் என்பதா என்பதில் எனக்கு சிறு குழப்பம். படகுகளை விடச் சற்று பெரியதாகவும் கப்பலை விட சின்னதாகவும் கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பயணத்துக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெரிய படகு அது… 

படகின் மேல் தளத்தில் இயல்பாக நின்று கொண்டும் உக்கார்ந்து கொண்டும் பயணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அவ்வப்போது நீச்சல் உடையணிந்த சிலர் விசைப் படகுகளின் எங்களை கடந்தும் குறுக்கறுத்தும் சென்றனர். அவர்களை பார்த்து ரசித்தபடி இருந்த என்னை;


“என்ன பார்க்கிறியள்…”  என்ற  என் மனைவியின் குரல் நினைவுலகிற்று அழைத்து வந்தது…

“பார்க்கிற திசை எல்லாம் அதுவே தெரிந்தால் நான் என்ன செய்ய…” 

“அந்தப் பாலத்தைப் பாருங்கோ எப்படி வடிவு…” எனக் கதையை மாற்றினாள்…

“சரி சரி… மார்பை மூடிக்கொள் சளி பிடிக்கப் போகுது…” என்றேன். 

அழகிய ஹங்கர்ஃபோர்டு பாலம் மற்றும் கோல்டன் ஜூபிளி பாலங்களுக்கு கீழே படகு ஒரு ரதம்  போல நகர்ந்து கொண்டிருந்தது. நீலக் கம்பளம் விரித்தது போல ஆகாயத்தின் நீல நிறம் தேம்ஸ் நதி எங்கும் அப்பிக் கிடந்தது. 
நதியின் இருமருங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் பரவிக் கிடந்தன. பிரமாண்டமான ராட்டினங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றுக்கும் பஞ்சமில்லை… 

“லண்டன் பிரிஜ்க்கு இன்னும் எவ்வளவு தூரம்... “ என்றாள் பார்க்கும் ஆவலில் என் மகள்… 

“இன்னும் முப்பது நிமிடங்கள் ஆகும்” என்றார் அங்கிருந்த ஒருவர்.


வாட்டர்லூ பிரிஜ்,  பிளாக்ஃபைர்ஸ் பிரிஜ்,  மில்லினியம் பிரிஜ்,  சவுத்வார் பிரிஜ், கேனன் ஸ்ட்ரீட் ரயில்வே பிரிஜ் என அடுக்கடுக்காக ஐந்து பாலங்களைக் கடந்தபோதுஅருகில்  அழகிய லண்டன் பிரிஜ் எங்களை நெருங்கியது.

என் பிள்ளைகளுடன் இன்னும் சில பிள்ளைகள் கூட்டாக “ லண்டன் பிரிஜ் இஸ் ஃபோலிங் டவுண்…” என பாடத் தொடங்கினர். 

நானும் என் கண்ணில் பட்டதை எல்லாம் பல கோணங்களில் என் காமெராவுக்குள் கொண்டு வந்தேன். 

எல்லோரும் படகை விட்டு இறங்கி லண்டன் பிரிஜ் அடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கியதுதான் தாமதம் எங்கிருந்து வந்ததோ தெரியாது பேய் மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. 


கண்ணாடி இழைகளால் அமையப்பெற்ற அழகிய பந்தல் போன்ற அமைப்புடைய இடத்தில் சென்று சேர்ந்தோம். அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டார்பெர்க் காஃபி ஷாப் எதிரே தெரிந்தது.

“எனக்கு பசிக்குது…” என்றான் மகன் 

“அவனுக்கு ஒரு டோனட் வாங்கி வரும்போது எனக்கு ஒரு காஃபி” என்றாள் என் மனைவி

 காஃபி ஷாப் மெனு கார்டில் ஸ்வீட் சாய் டீ இருந்தது. எனக்கு ஒரு ஸ்வீட் சாய் டீ சொன்னேன் தனக்கு காஃபி வேண்டாம் ஸ்வீட் சாய் டீ வேணும் என்றாள் என் மனைவி. 
“சாய் டீ நல்லாய் இருக்குதா” மனைவியைப் பார்த்துக் கேட்டேன்.

“ம்ம்ஹூம்…” எனத் தலையை ஆட்டினாள்

சாப்பிட்ட வரை போதும் என்று எழுந்தபோது மழை நின்று கருமேகங்கள் கலைந்து வானம் மறுபடியும் வெளுப்பானது. ஒருவிதமான குளிர் காற்று வீசத் தொடங்கியது. 

“சரி வாங்கோ விழுந்து எழுந்த பாலம் பார்க்க போவோம்” என்றேன்… 

“என்னது விழுந்து எழுந்த பாலம்… “ என்றாள் என் மகள் 

“லண்டன் பிரிஜ் ஐஸ் ஃபோலிங் டவுண்…” என்றேன் 


மீண்டும் குட்டிஸ் மூவரும் சேர்ந்து “லண்டன் பிரிஜ் இஸ் ஃபோலிங் டவுண்…” எனப் பாடத் தொடங்கினர். 

சுமார் ஒரு மணிதியாலத்துக்கு மேலாக மெல்லிய தூறல் விழும் மிக ரம்மியமான வானிலையில் பிடித்தமான குளிரில் மனதுக்கு மிகப் பிடித்தமான மிகவும் வேண்டப்பட்ட மனிதர்களுடன் நதிக்கரையில் லயித்திருந்தோம்.

பிரகாசமான நினைவுகள் இவ்வளவையும் தாண்டி அடையாளம் தெரியாத ஓருணர்வு நெஞ்சில் ஊடுருவியிருந்தது. இத்துணை காலமும் படங்களில் மட்டுமே கண்டு ரசித்த அழகை கண் முன்னே காணும் போது சொல்ல முடியாத பேரானந்தம் எமக்குள்… 


குளிர் காற்று சற்று பலமாக வீசத் தொடங்கியிருந்தது. வானத்தில் விண்மீன்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. பிள்ளைகள் லண்டன் பிரிஜ் பார்த்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். 

கைகளை ஒன்றுடன் ஒன்று இருக்க கட்டிக் கொண்டேன். ஒரு காஃபியுடன் இங்கிருந்து வெளிக்கிடலாம். குளிருக்கு நல்லது என்றபடி புறப்படத் தயாரானோம். 

ஐந்து நிமிட நடை தூரத்தில் ரயில் ஸ்டேஷன் இருந்தது. நாங்கள் வந்த மறு நிமிடமே சொல்லி வைத்தாற்போல் ரயில் வந்து நின்றது. 

ரயில் புறப்பட்டது. இரவு நேர மின்னொளியில் கண்ணாடிக்கு வெளியே அகல விரிந்துகொண்டேயிருந்த லண்டன் மாநகரின் வீதியின் இரு பக்கமும் உள்ள பிரமாண்ட கட்டிடங்களையும் விரைவுச் சாலைகளையும் வெளிச்சத்தால் அதைப் போர்த்தியிருக்கும் மின் விளக்குகளையும் பார்க்கிறேன்வார்த்தைகளால் விவரிக்க முடியாத கண்கொள்ளா காட்சி அது. 

சுமார் அரை மணி நேரப் பயணத்தின் பின் வீட்டினை வந்தடைந்தோம். அன்றைய இரவு முழுவதுமாகவே தூங்க முடியவில்லை… அடிக்கடி ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி மஞ்சள் விளக்கொளி படர்ந்திருந்த இரவின் வீதியை உற்றுப் பார்க்கிறேன்… 

அதிகாலைச் சூரியனின் முதல் ஒளிக்கரம் தென்பட்டபோது மெதுவாக எழுந்து யன்னல் கண்ணாடியை திறந்த போது சில்லென்ற குளிர்காற்று முகத்தில் பட்டுத் தெறித்த போது மீண்டும் தேம்ஸ் நதியும் லண்டன் பிரிஜூம் மனதுக்குள் வந்து போனது…