3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின் பண்புகள்

ஈழநாட்டில் பாரம்பரியமாக மக்களிடையே நிலவி வந்த உயரிய ஒழுக்கங்கள் பல போத்துக்கேயர்-ஓல்லாந்தரின் வருகையுன் இழக்கப்பட்டன. உயர் இலக்கண, இலக்கிய, சமய கல்விகள் மறைமுகமாகக் கற்க-கற்பிக்க வேண்டிய சூழல் உருவானது. கிறிஸ்த்தவம் போதிக்கப்பட்ட இடங்களாகப் பாடசாலைகள் மாற்றியமைக்கப் பட்டன. பின்னையநாளில் ஒல்லாந்தர் சற்று நெகிழ்வுப் போக்குடன் இருந்தமையினால் சைவசமயம் சார்பான இலக்கியங்களும் தோன்ற வழியேற்பட்டது.

போத்துக்கேயர் காலத்துக்குரியதான மூன்று நூல்களுமே கிறிஸ்தவ மதச்சார்புடன் காணப்பட்ட நிலையில் ‘ஞானப்பள்ளு’ ஈழத்து இலக்கிய மரபில் இருந்து விடுபட்டு உரோமபுரியையும் ஜெருசலத்தையும் விதந்து பாடும் தன்மையுடன் விளங்குகின்றமை சுட்டத்தக்கது. இதன்மூலம் கிறிஸ்து புகழை தமிழ்க் கிறிஸ்தவர் மத்தியில் நிலைநாட்ட ஞானப்பள்ளு பயன்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அம்மானை வடிவினைத் தொட்டுக்காட்ட மணிவாசகர் அதனையே பாட, அதில் சிறு மாறுபாட்டுடன் தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார் போத்துக்கேயர் காலத்தில் ஆர்ச்யாகப்பர் அம்மானையைப் பாடினார். பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் திருச்செல்வர் அம்மானை பாடிக் கிறிஸ்தவ மதப் பெருமைகளை நிலைநிறுத்தினார்.

விரதமகிமைகளைக் கூறும் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் புராணம் போன்றனவும் தத்தம் ஊர்களிலுள்ள தலங்களை முன்னிலைப் படுத்தும் நூல்களும் பாடப்பட்டன. வட்டுக்கோட்டை கணபதிஐயர், இணுவில் சின்னத்தம்பிப் புலவர் போன்றோர் இத்தகைய இயல்புகளுடன் கூடிய மண்வாசனை இலக்கியங்களைப் படைத்தனர். இது இவ்வாறிருக்க மாதகல் மயில்வாகனப் புலவர் காசி, சிதம்பரம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்து மீண்டபின் அவைபற்றிப் பிரபந்தங்களைப் பாடினார்.

தனிப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறும் நூலாகப் பாடப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் உள்@ர் பிரபுத்துவ முறைமை உயர்த்தப்பட்டு பிரபுக்கள் பாட்டுடைத் தலைவர்களாக மாறும் நிலை உருவானது. கரவைவேலன்கோவை, தண்டிகை கனகராயன் பள்ளு(5) போன்ற இலக்கியங்களினை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

இராசமுறை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, கைலாயமாலை முதலிய முன்னைய நூல்களின் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து, தன்னுடைய காலக் கர்ணபரம்பரைக் கதைகளையும் இணைத்து வசனநடையில் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’யினை மாதகல் மயில்வாகனப் புலவர் பாடியுள்ளார்.(6) இதேவேளை சாதாரண மக்களுக்கான செய்திகள் பல கூத்து, நாடகம் என்ற வடிவங்களினூடே மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கிய வடிவமானது பிரபந்தம், காவியம், உரைநடை(வசனம்), நாடகம், கூத்து போன்ற பல தரங்களுக்கு உட்பட்டிருந்தது. பிரபந்தங்கள் சமயச் சார்புடையனவாயும் தமிழகப் பிரபந்தங்களுடன் வடிவில் ஒத்துப் போவதாகவும் அமைந்திருந்தன. பொதுவாக எதுகை, மோனை, யாப்பு முதலானவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றபோது கவித்துவம் நழுவிவிடுவதும் உண்டு.(7) இத்தகைய நழுவலை இவ் இலக்கியங்களில் காணமுடிகின்றது.

வௌ;வேறு சமூகநிலைப்பட்ட மக்களைக் கொண்ட சூழலில் இலக்கியம் படைக்க முற்படுகின்ற போது, குறிப்பாக பிரச்சார இலக்கியங்களை படைக்கின்ற போது, அவரவர் மொழியில் அவர்களுக்கு இலகுவில் புரியும்படி இலக்கியங்களை படைப்பது அவசியமாகின்றது. இந்த உண்மையை புரிந்து போர்த்துக்கேய ஒல்லாந்தர்கால இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இருந்த போதிலும் யமகம், திரிபு முதலிய சொல்லணிகளின் கையாட்சியையும் இக்கால இலக்கியங்களில் பரக்கக் காணக்கூடியதாகவுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி