1.2. ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்

ஈழநாட்டில் மகாசேனன்(கி.பி.275-310) ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் நாட்டில் சங்ககாலம் முடிவுறும் கட்டத்தினை நெருங்கி இருந்தமையினை இலக்கியங்கள் மூலம் அறியமுடிகின்றது. மகாவம்சம் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான செய்தியினை விரிவான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டது. இந்நிலையில் ஈழத்துப் பூதந்தேவனாருடன் (சங்க இலக்கியங்களுடன் ) ஈழத்து இலக்கிய முயற்சிகளும் தொடங்குவதாக எடுத்துக்கொண்டால், அதற்கு அடுத்த காலகட்டமாக கி.பி.1216இல் தொடங்குகின்ற ஆரியச் சக்கரவர்த்திகள் (யாழ்ப்பாண இராச்சிய) காலத்தையே கொள்ள முடிகின்றதெனில், கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை வரை ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லையா என்ற ஐயப்பாடு எழுகின்றது. இந்த நீண்ட இடைவெளி இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினைத் தொடர்ச்சியின்றிக் காட்டுவதனால் ஈழத்தவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு யாதென அறிய முடியாமல் உள்ளது.

கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பதுளைக் கல்வெட்டில் “தெமழன்டரடனா தென்தரு ஆவா நொதென இசா ………………”(6) என்ற செய்தியொன்று காணப்படுகின்றது. தமிழர்களுக்கு நாட்டின் தலைவர்களின் புதல்வர்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்பதே இதன் கருத்தாகும். தமிழர்கள் அரசியல் மேலாதிக்கம் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய செய்திகள் பொறிக்கப் பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழர்களின் ஆதிமூலங்களைத் தேடுவதென்பதும் கடினமான பணியாகவே அமையும்.

வெள்ளம், தீ முதலிய இயற்கை அனர்த்தங்களினாலும், அடிக்கடி நிகழ்ந்த படையெடுப்புக்களாலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பட்டமையினாலும், கறையான் முதலியவற்றினாலும், தொகுத்தல்-தொகுப்பித்தல் முயற்சிகள் இன்மையாலும், நிறுவன ரீதியிலான முயற்சிகள் இன்மையாலும் எனப் பல காரணங்களினால் அக்கால இலக்கியங்களைப் பேணிப் பாதுகாக்க முடியாமல் போயிருக்கலாம். ஏனெனில் பழமை வாய்ந்த ஓர் இனம் தமக்கென ஒரு இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

மிகப் பழைய காலத்தில் இருந்தே தமிழ் மக்கள் ஈழ நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை தொல்லியல் சான்றுகள் பல நிறுவியுள்ளன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இத்தகைய சான்றுகள் பல ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது. ஈழத் தமிழரிடையே வழங்கிவரும் சடங்குகள், வழிபாட்டு மரபுகள், போன்றனவற்றின் ‘ஆதிமூலங்களை’யும் தமிழ்-சிங்கள மக்களிடையே நிலவி வரும் வாய்மொழிப் பாடல்கள் பற்றிய தொன்மங்களினையும் துல்லியமான முறையில் எடுத்து தொகுத்து ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமிடத்து இந்த இடைவெளி சிலவேளைகளில் நிரப்பப்படலாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் ‘புத்ததத்தர்’ உட்படப் பல அறிஞர்கள் இலங்கையின் மகா விகாரையில் தங்கியிருந்து பாளி மொழியிலிருந்த நூல்களைக் கற்று தமிழில் உரை எழுதினர் எனத் தெரிகின்ற போதிலும் அவை எவையும் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் நீண்ட காலமாக தமிழ் இலக்கியத்துடன் பௌத்த மதக் கருத்துக்கள் தொடர்பு படுவதை இதனூடாக அவதானிக்க முடிகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்துக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் இலக்கியத் தொடர்புகள் இருந்தன என்பதற்கு தேவாரங்கள் சான்றாக உள்ளன. இலங்கையின் புகழ் பெற்ற சிவத் தலங்களான திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்பன மீது திருநாவுக்கரசரும் திருஞான சம்மந்தரும் தேவாரங்கள் பாடியமை மூலம் இத் தொடர்பு நிலை நிறுவப்பட்டது.

மும்முடிச் சோழ மண்டலங்களில் ஒன்றாகச் சோழர்கள் இலங்கையை அரசு புரிந்த வேளையில் புலத்தி நகரில் (பொலநறுவையில்) இருந்து கொண்டு சோழர்கள் தமிழை வளர்த்தனரா என்பதையும், சோழர் காலப் புலவர்கள் யாராவது இலங்கைக்கு வந்தனரா என்பதையும் அறிய முடியாத நிலையில் அக்காலக் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் இலங்கைக்கு வந்து தங்கிச் சென்றார்(7) என மரபுவழிக் கதை ஒன்று நிலவி வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

பொலநறுவைக் காலக் கல்வெட்டுக்களில் வெண்பா, விருத்தம் முதலிய தமிழ்ப் பாவினங்களின் செல்வாக்கினை அவதானிக்க முடிவதுடன், அக்காலத் தமிழ் உரைநடைக்கான இடத்தினையும் ஓரளவு ஊகித்து அறிய முடிகின்றது. அனுராத புரத்தின் வடபகுதியில் இந்து சமயக் கட்டிட அழிபாடுகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட நான்கு நாட்டார் கல்வெட்டும் கி.பி. 9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்பட்ட நிலையில் அதன் இறுதியில் காணப்படும் வெண்பா வருமாறு
“ போதி நிலமமர்ந்த புண்ணியன் போலெவ்வுயிர்க்கும்
நீதி லருள் சுரக்குஞ் சிந்தையா – னாதி
வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை
யொரு தர்ம பாலனுளன் ”
இவ் வெண்பா அக்காலச் செய்யுள் யாப்பின் உன்னத நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளதுடன், அனுராதபுரப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாகவும் இதனைக் கொள்ள முடிகின்றது.

நிஸங்க மல்லன் (கி.பி.1187-1196) என்பவன் பொலநறுவையைத் தலைநகரமாகக் கொண்டு ஒன்பது ஆண்டுகள் மிகச் சிறப்பான ஆட்சி புரிந்தான். இவனுடைய காலத்துக் கல்வெட்டு ஒன்று விருத்தப் பாவினால் பொறிக்கப் பட்டுள்ளது. அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இராச்சியங்களிலே தமிழ் மொழி வழக்கில் இருந்தமைக்கு மேற்படி கல்வெட்டுக்களில் உள்ள வெண்பா, விருத்தம் முதலிய தமிழ் யாப்பு வடிவங்கள் கையாளப் பட்டு செய்திகள் பொறிக்கப் பட்டமை சான்றாகின்றன. இதேபோல கேகாலையில் கோட்டகம என்ற இடத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் ஈழத் தமிழர்களின் இலக்கியப் பாரம்பரியத்தையும் அவர்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என்ற செய்தியினையும் அறிய முடிகின்றது.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் உண்மையான பூர்வீக வரலாறு இலங்கையிலும், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகளினால் தெளிவு பெறவேண்டியுள்ளது. இதில் இலங்கைத் தமிழருக்குரிய சான்றுகள் காணக்கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என்ற குறைபாடும், கிடைத்த சில சான்றுகள்கூட முழுமையாக ஆராயப்படவில்லை என்ற குறைபாடும் நியாயமான குற்றச்சாட்டாகவே தெரிகின்றது. இந்த வகையில் சரசோதிமாலை என்ற நூலின் தோற்றத்துக்கு முன்னதான தமிழ் இலக்கியம் பற்றிய உதிரியான சில தகவல்களைத் திரட்டி அவற்றினூடே அக்காலத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியினை ஊகித்தறிய வேண்டிய அல்லது நிறுவ வேண்டிய கடப்பாடும் மேலெழுகின்றது.

கருத்துகள்

  1. mikka nanri,
    pothuth thervukku innum 2 maathangal mattume irukkum nilaiyil eelaththu ilakkiya varalaatrinai theadikkondirunden engum kidaikkaatha nilaiyil ungal p[athivu kai koduththathu,mikka makilchi,mikka nanri,
    melum valarka vaalthukkal.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி