சித்திரைத் தமிழ் மகள்

சித்திரைத் தமிழ் மகள்
சிலிர்ப்புடன் வருகின்றாள்
நித்திரை விட்டு
விரைவினில்
எழுந்திடுவோம்...
மருத்துநீர் தலை தடவி
வெந்நீரில் குளித்திடுவோம்

நெற்றியில் நீறணிந்து
நெறிப்படி வணங்கிடுவோம்
பெரியோர் தாள் பணிந்து
கையுறை பெற்றிடுவோம்...

எப்போதும் போலவே
அந்த நினைவுகள்
வந்தெம் மனத்திரை
ஊசலாடுகின்றன...
முகமில்லா உருவங்களுக்கும்
நிசப்தமான வார்த்தைகளுக்கும்
உரிமை கொண்டாடியபடி
நீண்டு கொண்டிருக்கிறது
எம் இரவுகள்...

சில்லறை வாங்கி
உண்டியல் சேர்த்து
உறவுகள் கூடி
மருதடி சேர்ந்து
மகிழ்ந்திருந்த அந்தக்காலம்
மலையேறி விட்டது...

அப்பு வன்னியிலே
ஆச்சி வல்லையிலே
தம்பி லண்டனிலே
தவமிருந்து பெற்ற தனையன்
சூரிச்சிலே...
கொள்ளிக் குடமெடுக்க
ஊரிலே யாருமில்லை

இந்த லட்சணத்தில்
வந்த வரிசத்தை
ஆர் நினைப்பார்
இந்த வேளையிலே...
ஆனாலும் நித்திரை விட்டு
விரைவாக எழுந்திடுவோம்
அன்றேல்...
நித்திரையின்றி
விடியும்வரை விழித்திருப்போம்...
சித்திரைத் தமிழ்மகள்
சிலிர்ப்புடன் வருகிறாள்
வாருங்கள் நாம்
சோகங்கள் மறந்து
சுமைகளை ஒருகணம்
இறக்கி
மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி