இயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை தொடர்பான அறிமுகமும்

தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதேவேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) என்றும் பொருள்படும்.

இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்கள் பலர் அரசியலின் உள்ளீர்ப்பினால் உந்தப்பட்டவர்களாக, வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இலக்கியங்களை எழுதியுள்ளனர். ஓர் இலக்கியம் காலத்தினை அடிப்படையாகத்தான் தோன்றுகின்றது என்ற உண்மையினையும் நாம் மறந்துவிடக்கூடாது. எந்தவொரு இலக்கியத்தினையும் ஊன்றிக் கற்கும் வாசகன் ஒருவன் அவிவிலக்கியத்தினூடாக அது தோன்றிய காலகட்டத்தை இனங்கண்டு கொள்ள முடிகின்றதெனில், எந்தவொரு இலக்கியமும் வரலாறாகி விடுகின்றமை தவிர்க்க முடியாததாகின்றது.

இலக்கிய வரலாற்றுக்கு காலத்துக்கு காலம் தரப்பட்ட பல்வேறு பகுப்புக்களையும் கூர்ந்து கவனிக்கின்ற போது இலக்கிய வளர்ச்சி பற்றிய அறிவெல்லை விரிந்து செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. பொதுவாகத் தமிழ் இலக்கியப்பரப்பினை பகுக்க முற்பட்டோர் அரசியலடிப்படையிலான இலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்பினையே முன்வைத்துள்ளனர். எனவே ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் இத்தகைய அரசியல்சார் அடிப்படையில் பகுத்துக் கொள்வதே சிறப்பான தெரிவாக அமையும்.
1. தொடக்க காலம் ( கி.பி. 1216 வரை… )
2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் ( கி.பி. 1216-1621 வரை)
3. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் ( கி.பி. 1621-1796 வரை)
4. ஆங்கிலேயர் காலம் ( கி.பி. 1800-1948 வரை)
5. தற்காலம் ( 1948 இன் பின்… )

என்ற அடிப்படையில் பகுப்பாய்வினை அமைப்பதனால் மாணவர்கள் இலகுவான முறையில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி