இயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்

ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் மேனாட்டாராட்சியில் ஆங்கிலேயராட்சியே பெரும் புரட்சி செய்ததென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரித்தானியர் ஆட்சியும் கத்தோலிக்க மதமும் ஈழத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம் என்ற கட்டமைப்புக்களில் பாரிய தாக்கத்தினை உண்டுபண்ண, அதன்விளைவாக தமிழ் இலக்கியமும் நவீனமயவாக்கத்துக்குள் படிப்படியாக உள்வாங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டென்ற இவ் இலக்கியப் பயில் நெறியானது விரிந்து பரந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு, மூன்று தசாப்தங்களினையும் தன்னகத்தே கொண்டு, பல புதுமைகளைச் செய்து தமிழிலக்கியத்தில் மாற்றங்களினை உண்டுபண்ணியதுடன் பிற்காலத்தில் ‘நவீனத்துவம்’ என்ற செல்நெறியில் தன்னையும் இணைத்துப் புதுமை படைக்க வழிகோலியது.

“தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில், 1835-1929க் காலகட்டமே சிக்கல் மையப்பட்ட காலமென்று கொள்ளப்படத் தக்கதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை விளங்கிக் கொள்வதற்கும் அதனைத் தமிழர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும், மேனாட்டு அணுகுமுறைகளையும் கைக்கொண்டு தொழிற்பட்ட ‘உருவாக்க காலம்’ என்ற வகையில், இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றெழுது நெறிகள், தமிழிலே இப்பாடத்தின் அணுகுமுறையில் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.”(1)

எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறுவது இவ்விடத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். இவ்வகையில் 19ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கியச் செல்நெறியில் ஓர் மாறுங்காலப் பிரிவாக நின்று பிற்கால இலக்கியங்களுக்கு வழிகாட்டிய வகையிலும் அவற்றுக்கான அத்திபாரமாக இருந்த நிலையிலும் ஈழத்து இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்கின்றது.

ஆங்கிலேய நேரடித் தொடர்பானது தமிழ்ச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப பின்வரும் மூன்று வழிகளில் துணைபுரிந்தது.


1. தமிழ்ச் சமூகத்தின் தனித்துவம்
2. தமிழர்களை ஒருங்கிணைத்தல்
3. தமிழ்ச் சமூக ஒருங்கமைப்பு


என்ற நிலையில் பாரிய மாற்றங்களினை உண்டுபண்ணியது. அதுவரைகாலமும் ஈழத்தறிஞர் பலர் தமிழகத்துடன் சிற்சில தொடர்புகளைக் கொண்டிருப்பினும் ‘தமிழர்’ என்ற பரந்துபட்ட நிலையில் ‘தமிழ்த்தேசியம்’ ஒருங்கிணைக்கப்பட்ட நிலையினை நாம் ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் ஈழத்து-தமிழக பணிகளிலிருந்து அறிய முடிகின்றது. இதற்குக் களம் அமைத்த 19ஆம் நூற்றாண்டானது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிறப்புப்பெறுகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி