2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன.

கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது.
வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன்றான்-வாழை) மொழி நடையில் கடினமான இறுகிய சொற்களுடன் இத்தகைய நூல்கள் விளங்கியமையானது மரபுரீதியாக அல்லது செவிவழியாக மருத்துவம் சார் கருத்துக்கள் பயின்று வந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுவூட்டுவனவாக உள்ளன.

வரலாறு என்பது எழுந்தவன் சார்பாக எழுதப்படுவது என்ற கூற்றுக்கு அமைய, ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திலும் கைலாயமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு போன்றன நிலவுடைமை வர்க்கத்தினரையும் பிரபுக்கள், அரசர் போன்றோரையும் மகிழ்விப்பனவாகவும் அவர்களின் குலமரபு கூறுவனவாகவும் தோற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.

கண்ணகி வழக்குரையும் கதிரமலைப்பள்ளும் சமய நூல்களாக இருப்பினும் அவற்றில் சமூகக் கருத்துக்கள் செறிவுடையனவாகக் காணப்படுகின்றன. கிராமிய வழிபாட்டு முறை, கப்பல் கட்டுதல், கப்பல் ஓட்டம், மீன்பிடித்தல், போன்ற கிராமிய நடவடிக்கைகள் நிறைந்த நூலாக கண்ணகி வழக்குரை விளங்குகின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய குறிப்புக்களையும் இதிலிருந்து அறிய முடிகின்றது.

‘பள்ளு’ இலக்கிய வடிவங்களில் எல்லாம் காலத்தால் முந்திய இலக்கியமாகக் கதிரமலைப் பள்ளு விளங்கக் காணலாம். தமிழ் நாட்டில் முக்கூடற்பள்ளு தோன்ற முன்னரேயே ஈழத்தில் கதிரமலைப்பள்ளு தோன்றி விட்டது என இலக்கிய ஆய்வாளர்கள்கள் குறிப்பிடுவர். கற்பனை வளம் பொருந்திய வர்ணனைகளுடன் பாடல்கள் காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

தக்கிணகைலாய புராணத்தின் வரவுடன் ஈழத்தில் புராணம் ஓர் இலக்கிய அந்தஸ்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து திருக்கரைசைப் புராணமும் தோன்றி தலப் பெருமையைக் கூறியது. திருக்கரைசைப் புராணத்தில் உமாபதிசிவாச்சாரியார் பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன.

இரகுவம்சம், கண்ணகி வழக்குரை ஆகிய இரண்டும் ‘காவிய’ அமைப்புடையன என்று சிலர் கூற, வேறுசிலர் இரகுவம்சம் மட்டுமே காவியம் என்பர். இருப்பினும் இவற்றுக்கிடையிலான இன்னோர் ஒற்றுமையினையும் மறுப்பதற்கில்லை. உண்மையில் இவை இரண்டுமே தழுவல் நூல்கள் ஆகும். காளிதாஸமகாகவியின் இரகுவமிசம் தமிழில் அரசகேசரியால் மொழிபெயர்க்கப்பட்டது. சிலப்பதிகாரக் கதையினைத் தழுவிக் கண்ணகி வழக்குரை எழுதப்பட்டது. இரகுவம்சம் இராமாயணக் கதையின் தழுவலாகும்.

ஆரியச்சக்கரவர்த்திகால இலக்கியங்களினை ஓருமித்த பார்வையில் நோக்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் “பொதுவாக இலக்கியம் என்று முன்னர் குறிப்பிட்டோர் சிருஸ்டி இலக்கியத்தை மாத்திரமன்றி, சமயம், தத்துவம், சாஸ்திரம், அறிவியல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்களையும் கருத்திற் கொண்டனர். ஆதிகாலத்தில் வாய்மொழிப் பாடல்கள் வழங்கிய போது வாகட நூலில் இருந்து வம்ச வரலாறு வரையில் செய்யுள் வடிவிலேயே அமைந்து நிலவியது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.”(10) எனக் கூறியதையும் இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.






அடிக்குறிப்பு

1. பட்டினப்பாலை, வரி, 190-192
2. கழகத் தமிழ் அகராதி, தென்னிந்திய நூற்பதிப்புக் கழகம், பக்144
3. நாராயணசாமி ஐயர், நற்றிணை நானூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, பக் 62
4. முத்துத்தம்பிப்பிள்ளை.ஆ, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், நாவலர் அச்சுக் கூடம், பக் 2
5. மேலது, பக் 2
6. விமல் சுவாமிநாதன், புராதன சிங்கள இலக்கியங்களில் தமிழின் செல்வாக்கு (கட்டுரை)
7. மேலது,
8. சிவலிங்கராஜா.எஸ், ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, பதிப்பு-2, பக்12
9. நடராசா. எவ் .எக்ஸ் .சி, ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு, பக்59
10. மேலது, பக்33
11. நடராசா.க.செ, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, பக்06
12. அனந்தராஜ்.ந, ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள், பக்71
13. கைலாசபதி.க, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், பக்14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி