இயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.1621-1796)

ஆரியச்சக்கரவர்த்திகளின் பின்னர் ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிய அரசுகளினால் ஆளப்பட்டன. போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் அடிப்படையில் தமிழையும் அதனுடன் இணைந்த சைவத்தையும் எதிர்ப்பவர்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரம், அச்சுச் சுதந்திரம் என்பன தமிழருக்கோ அல்லது சைவருக்கோ சுயாதீனமாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலேயராட்சியில் ஓரளவு கருத்துச் சுதந்திரமும் பூரண அச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது. அதைவிட ஆங்கிலேயராட்சியில் நவீனத்துவம் சார்பான கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியில் போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் வேறுவேறான ஆட்சி செலுத்தியிருப்பினும் இலக்கிய நிலைநின்று, “ஒருங்குசேர வைத்து நோக்கும் போது ஈழத்திலக்கிய வளர்ச்சியின் முக்கிய பண்புகள் சில துலக்கமாகத் தெரிவதைக் காணலாம்.”(1) எனவே போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தினை இணைந்த பகுதியாகவும் அதைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் காலத்தை தனியான பகுதியாகவும் விரிவான முறையில் நோக்குவதே பொருத்தமானதாக அமையும்.

போத்துக்கேயர் அரசு கட்டில் ஏறிய பின்னர் ஈழத்தில் கட்டிறுக்கமான அரசியல்சார் நடவடிக்கைகள் அரங்கேறின. சைவசமயம், இலக்கணம், சுதேச இலக்கியம் போன்றன மறைமுகமான முறையில் கற்பிக்கப்பட்டு வந்தன. தமிழர்கள் பலர் சலுகைகளுக்காகவும் உயர் தொழில்களுக்காகவும் மதம் மாறினர்.

சுதேச கல்விக்கூடங்கள் ஆரம்ப கல்வியூட்டும் நிறுவனங்களாக மட்டுமே செயற்பட்டமையினால் பாரம்பரிய வழிபாட்டு மரபுகள், கல்வி, சடங்குகள் போன்றன படிப்படியாகத் தடைசெய்யப்பட்டு கிறிஸ்தவ சூழலுக்குள் மக்கள் வலிந்து உள்வாங்கப்பட்டனர். இதேவேளையில் சைவப்பணியை, தமிழ்ப் பணியை தொடர விரும்பிய பலர் தமிழ் நாட்டுக்கு ஒழித்து ஓடினர்.

கல்விக்கூடங்களை அமைத்த போத்துக்கேயர் அவற்றை மதம் மாற்றத்துக்கான ஓர் கருவியாகவும் பயன்படுத்தினர். தமது கல்விக் கூடங்களில் கிறிஸ்தவ கல்வியை மட்டும் புகட்டி, அங்கு கற்றோருக்கு உயர் தொழில் வாய்ப்புக்களை வழங்கினர். கிறிஸ்தவ இலக்கியங்களுக்கு முன்னுரிமை அளித்தனர். ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் போன்று அறிவியல் சார்பான நூல்கள் அதிகம் தோன்றாமைக்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்தது.

போத்துக்கேயர் கால நிலைமை இவ்வாறிருக்க ஒல்லாந்தர் காலத்தில் நிலவிய ஆட்சியில் ஓரளவு நெகிழ்வுத் தன்மை விளங்கியது. வடபகுதியில் ஒல்லாந்தரால் முன்வைக்கப்பட்ட ‘தேசவழமைச் சட்டம்’(2) கிழக்கில் முன்வைக்கப்பட்ட ‘முக்குகச் சட்டம்’(3) என்பன காரணமாக சுதேச மக்கள் தமது சமூக, பண்பாட்டு அம்சங்களைப் பேண ஓரளவு வழிகிடைத்தமையானது நெகிழ்வுத் தன்மைக்குக் காரணங்களாக அமைந்தன.

போத்துக்கேயர் காலத்தில் மறுக்கப்பட்டிருந்த மதச்சுதந்திரம், சுதேச மொழிக் கல்வி என்பன ஒல்லாந்தர் காலத்தில் ஓரளவு தளர்த்தப்பட்டமையினால் இக்காலத்தில் இந்துசமயம் சார்பான சிற்றிலக்கியங்கள் பல தோன்றவும் வழியேற்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி