இது கதையல்ல

சொந்த மண்ணின்
பெருமைகளை
சுவையுடனே சொல்ல
என் நா
எப்போதும் தடுத்ததில்லை

கிட்டிப் புள்ளடித்து
கிளித்தட்டு மறித்து
எட்டியெட்டி நின்று
கெந்தித்தொட்டு விளையாடி
எம்
செம்மண் பூமியிலே
பட்டகதை சொல்லிடவா?

கன்னியம்மன் கோயிலிலே
காரிருள் பூசைவேளையிலே
எம்
சுட்டிப் பருவமதில்
கள்ளன் பொலிஸ்
விளையாடி
விழுந்துடைபட்ட கதை
சொல்லிடவா?

அகதியாகி
அல்லல் பட்டு
அலைந்த போது
அரை றாத்தல் பாணுக்கு
அஞ்சு மணிநேரம்
வரிசை கட்டி நின்ற
சோகக்கதை சொல்லிடவா?

புழுத்த பயற்றையும்
உழுத்த உழுந்தையும்
சோற்றுக் குதவாத
அரிசியையும்
அகதிக்கென்று தந்திடவே
அதை
கை கட்டி நின்று
வாங்கியுண்ட
கதை சொல்லிடவா?

செம்மணி தாண்டி வந்து
கிளாலிக் கரையினிலே
மழை நீரை
குடைபிடித்து
மடிச்சீலை
அதில் நனைத்து
அடிநாக்கில்
பிழிந்து விட்டு
தாகம் தணித்த அந்த
தவிப்புக் கதை
சொல்லவா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி