3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேயர் காலத்தில் எழுந்த நூல்கள் இரண்டு என்றும் மூன்று என்றும் கருத்துக்கள் நிலவுகின்ற இக்கால கட்டத்தில் இனங்காணப்பட்ட இலக்கியங்களான ஞானப்பள்ளு, அர்ச்யாகப்பர் அம்மானை, ஞானானந்த புராணம் ஆகிய மூன்றும் கிறிஸ்தவ சார்புடன் காணப்படுகின்றன.

அ. ஞானப்பள்ளு

‘வேதப்பள்ளு’ எனப் பலராலும் அறியப்பட்ட இந்நூல் ஜேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. யாரால் பாடப்பட்டது எனத் தெரியாது விடினும் அக்காலத்தில் ஜேசு சபையில் அங்கம் வகித்த ‘செபஸ்தியான் பொஸ்கோ சுவாமி’களின் அனுசரனையுடன் இது பாடப்பட்டிருக்கின்றது என்பதற்கும் கி.பி.1650க்கு முன்னரேயே பாடப்பட்டு விட்டது என்பதற்கும் நூலிலேயே அகச் சான்றுகள் காணப்படுகின்றன.

ஆ. அர்ச்யாகப்பர் அம்மானை

ஆரிய வம்சத்தவரான தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியாரால் 1647இல் இந்நூல் பாடப்பட்டது. ‘சந்தியோகு அம்மையார் அம்மானை’ எனவும் இது வழங்கப்பட்டு வருகின்றது. விருத்தப்பாவினால் பாடப்பட்ட இந்த நூலானது அடிநிலை மக்களைக் குறிவைத்துப் பாடப்பட்டது போலத் தெரிகின்றது. இந்து மக்கள் (யாழ்ப்பாணத்தில்) புராணபடனம் செய்வது வழக்கம். இத்தகைய படிப்பு மரபினைப் பின்பற்றி யாழ்.கிளாலியில் கட்டப்பட்ட அர்ச்யாகப்பர் ஆலயத்தில் வருட விழாவின் போது இவ் அம்மானையைப் படித்து வழிபட்டனர்.

இ. ஞானானந்த புராணம்

முன்னர் தரப்பட்ட இரு நூல்களும் இன்றுள்ளன. ஆனால் ஞானானந்த புராணம் இன்றில்லை. இந்நூல் எக்காலத்துக்குரியது என்பதில் பலரிடையேயும் முரண்பாடுகள் உள்ளன எனினும் போத்துக்கேயர் கால நூல் இது என்பதற்கான ஆதாரங்கள் வலுவுடன் உள்ளன. 1104 விருத்தப் பாக்களைக் கொண்டதாக தெல்லிப்பளை ‘தொம்.தியாகு’ முதலியாரின் விருப்பப்படி, ‘தொம்பிலிப்பு’ இதைப் பாடினார் என்றுரைப்பர்.

ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த இலக்கியங்களினை ஆய்வு வசதி கருதி, அவற்றின் பொருள் உள்ளடக்கத்துக்கு ஏற்ப,
பிரபந்த இலக்கியங்கள்
பிரபந்த வகையைச் சாராத இலக்கியங்கள் என இரண்டு வகைகளுக்குட்படுத்தி நோக்குவது பொருத்தமானதாக இருக்கும்.



அ. பிரபந்த இலக்கியங்கள்

புராணம்- சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் புராணம் -இவை மூன்றும் வரத பண்டிதரினால் பாடப்பட்டன.

தூது- கண்ணியவளை குருநாத சுவாமி மீது கிள்ளை விடு தூது -இது வரத பண்டிதரால் பாடப்பட்டது.
பஞ்சவர்ணத்தூது -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

அம்மானை- திருச்செல்வர் அம்மானை – தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார்

காதல்- வெருகல் சித்திரவேலாயுதர் காதல் -தம்பலகாமம் வீரக்கோன் முதலியார்

கோவை- கரவை வேலன் கோவை –நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்

அந்தாதி- கல்வளை அந்தாதி, மறைசை அந்தாதி -இவை இரண்டையும் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பாடினார்.
புலியூர் அந்தாதி -மாதகல் மயில்வாகனப் புலவர்

பள்ளு- பறாளை விநாயகர் பள்ளு –நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
தண்டிகை கனகராயர் பள்ளு –மாவிட்டபுரம் சின்னக்குட்டி ஐயர்

பதிகம்- இணுவில் சிவகாமியம்மை பதிகம் -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

ஊஞ்சல்- வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளியம்மன் ஊஞ்சல் -வட்டு.கணபதிஐயர்

துதி- இணுவில் சிவகாமியம்மை துதி -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

பிள்ளைத் தமிழ்- இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

விளக்கம்- காசியாத்திரை விளக்கம் -மாதகல் மயில்வாகனப் புலவர்



ஆ. பிரபந்த வகை சாராத இலக்கியங்கள்

காவியம்- திருச்செல்வர் காவியம் -தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார்

நாடகம்- அதிரூபன், அதிரூபாவதி - வட்டு.கணபதிஐயர்
ஞானலங்காரரூப நாடகம் -மாதகல் மயில்வாகனப் புலவர்
நந்தினி நாடகம் - இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

வரலாறு- யாழ்ப்பாண வைபவமாலை – மாதகல் மயில்வாகனப் புலவர்

சோதிடம்- சந்தான தீபிகை – அராலி ச.இராமலிங்க முனிவர்

வைத்தியம்- அமுதாகரம் - வரத பண்டிதர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி