4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்

கி.பி. 1835ஆம் ஆண்டில் அப்போது மகா தேசாதிபதியாக இருந்த சேர் “சார்ள்ஸ் மெக்காஃவ்” என்பவரினால் ‘அச்சுச்சுதந்திரம்’(2) இந்தியா எங்கணும் வழங்கப்பட்ட பின்னர் ஈழத்திலும் பல அச்சுச்சாலைகள் நிறுவப்பட்டன. இவ்வாறு சுதேசிகளினால் அச்சியந்திர சாலைகள் நிறுவப்பட்ட பின்னர் அச்சுக்கலையின் செயற்பாடும் விரிவடையத் தொடங்கியது. 1849இல் ஆறுமுக நாவலர் அவர்கள் நல்லூரில் அச்சியந்திர சாலையை நிறுவி(3) ஈழத்தவரின் இலக்கியச் சாதனைகள் பலவற்றுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். அச்சியந்திர விருத்தியானது அதிசயிக்கத்தக்க வகையில் ஈழத்தில் பெரும் இலக்கியப் புரட்சியை ஏற்படுத்தியது.

அ. பத்திரிகைத் துறைவளர்ச்சி
ஆ. உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்
இ. பதிப்பு முயற்சி
ஈ . புத்தாக்க முயற்சி
உ. மொழிபெயர்ப்பும் ஆய்வுமுயற்சியும்

போன்ற பல துறைகளும் பாரியளவில் வளர்சிசியடைந்தன.



அ. பத்திரிகைத்துறையின் வளர்ச்சி

19ஆம் நூற்டறாண்டில் ஆங்கிலேயரின் வருகையுடன் சுதேசிகளுக்கான அச்சியந்திரப் பயன்பாட்டு வசதிகள் உண்டாகின. இவ் அச்சுச் சுதந்திரமானது பத்திரகை, சஞ்சிகை போன்றவற்றின் வெளியீட்டு முயற்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது.

அக்கால ஊடகத்துறையில் அரசியலும், சமயமும், சமூகமும் பெற்றளவு செல்வாக்கினை அறிவியல் பெறவில்லை என்பது வருந்தப்பட வேண்டிய விடயமே. அமெரிக்க மிசநெறிமார் ஆரம்பித்த ‘உதயதாரகை’ (அழசniபெ ளவயச) 1841இல் வெளியான முதல் பத்திரிகை ஆகும். ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் ஆறுமுகநாவலரின் துணையுடன் உதயதாரகை புதுப்பொலிவு பெறத் தொடங்கியது. உதயதாரகையின் பின்னர் பல பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. 1841-1900ஆம் ஆண்டு வரை வெளிவந்த சில குறிப்பிடத்தக்க பத்திரிகைகள், சஞ்சிகைகளினை இவ் அட்டவணையில் நோக்குக.

சஞ்சிகையின் பெயர் விடயம் ஆண்டு

உதயதாரகை கிறிஸ்தவபிரச்சாரம் 1841
உதயாதித்தன் இந்துசமய பிரச்சாரம் 1841
உரைகல்லு கத்தோலிக்கம் 1845
இலங்கை நேசன் பொது 1848
வித்தியா தர்ப்பணம் பொது 1853
தின வர்த்தமானி செய்தி,அறிவியல் 1855
பாலியர் நேசன் சிறுவர் இதழ் 1859
பிறீமன் பொது 1862
இலங்காபிமானி சமயம், பொது 1863
புதினாதிபதி செய்தி 1870
யாழ்ப்பாணச் செய்தி அரசியல், சமயம், அறிவு 1871
உதயபானு சைவம் 1880
சைவசம்போதினி சைவம் 1881
விஞ்ஞானவர்த்தனி சைவம் 1882
முஸ்லீம்நேசன் முஸ்லீம் முன்னேற்றம் 1882
இஸ்லாம்மித்திரன் இஸ்லாம் 1893
மாணவன் கிறிஸ்தவம் 1896
முஸ்லீம் பாதுகாவலன் முஸ்லீம் முன்னேற்றம் 1900
திராவிடகோகிலம் சைவம் 1900
சத்தியவேத பாதுகாவலன் சைவம் 1901


(-நூற்பட்டியலாக்க உதவி-‘ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்’ வல்வை ந.அனந்தராஜ்-)

அறிவியல் சார் அம்சங்கள் குறைவாக இருப்பினும், பொதுவாக இக்காலப்பகுதியில் எழுந்த பத்திரிகைகளில் ஒருவிதமான பன்முகப்பாட்டைக் காணமுடிகின்றமை விசேடமானது. எளிமையான உரைநடை, புதமையாக்கம், உரைநடையில் நெகிழ்ச்சி, வசன அமைப்பில் மாற்றம் போன்ற தன்மைகளினையும் இப்பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்தமையினால் பிற்கால உரைஇலக்கிய வளர்ச்சிக்கும் வழிசமைத்த சாதனமாக விளங்குகின்றன.



ஆ. உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்

19ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் வளர்ந்த துறைகளுள் ஒன்றாக உரைநடை இலக்கியமும் அமைகின்றது. செய்யுள் இலக்கியத்தின் இடத்தினை வசனநடை கைப்பற்றியமையே இக்கால இலக்கியத்தின் வெற்றியாகும். அரசநிர்வாகம், மதப்பிரச்சாரம், நவீனகல்விமுறை, பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் போன்ற செயற்பாடுகள் காரணமாக வசன இலக்கியங்கள் பல எழுந்தன.

அச்சியந்திர விருத்தி, ஆங்கிலக்கல்வி விருத்தி, மொழிபெயர்ப்பு, துண்டுப்பிரசுரப் பயன்பாடு, பாடப்புத்தக அறிமுகம் போன்றனவும் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கான காரணங்களாக அமைந்தன. சுதேசிகள் புதிய இலக்கியங்களினை எளிமையுடன் படைக்க முற்பட்டமையும் பண்டைய ஏட்டுச் சுவடிகள் நூலுருப் பெற்றமையும் எனப் பல்வேறு புறக் காரணிகளும் ஈழத்தில் வசனநடை வளர்ச்சிக்கான உந்துசக்கியாகச் செயற்பட்டன.

செய்யுள்களை உரைநடையில் எழுதுதல், சமயச்சார்பான உரைநடை ஆக்கங்கள், நாவல், நாடகம், தனித்தமிழ் இலக்கியங்களின் தோற்றம், புலவர்களையும் பழைய நூல்களையும் ஆய்வுக்குட்படுத்தியமை எனப்பல புத்தாக்க முயற்சியில் ஈடுபட்டமையாலும் உரைநடை இலக்கியம் புதுமையான மெருகுடன் செல்லத் தலைப்பட்டது.

ஆறுமுக நாலலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, அறிஞர் சித்திலெப்பை முதலியோரின் பங்களிப்பு இத்துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என நாவலர் போற்றப் பட்டமையும், சி.வை.தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்புரையும் இவற்றுக்குத் தக்க சான்றுகளாம்.



இ. பதிப்பு முயற்சி

19ஆம் நூற்றாண்டில் தான் ஈழத்தில் மிகச்சிறந்த பதிப்பாசிரியர்கள் தோன்றினர். பண்டைத்தமிழ் நூல்கள் பல அழிந்தொழிந்து போகாமல், பதிப்பு முயற்சியில் தமிழகத்துக்கு வழிகாட்டும் வகையில் ஈழத்தறிஞர்களின் பணிகள் அமைந்தன. ‘நாவலர் பதிப்பு’ சுத்தத் தமிழில் அமைந்து காணப்பட்டதனால் அவரது பதிப்புக்கு ‘மவுசு’ கூடுதலாக இருந்தது.

நாவலரின் பின்னர் சி.வை.தா, ச.சரவணமுத்துப்பிள்ளை போன்ற பலர் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். சி.வை.தா. வின் பதிப்பு முயற்சிக்குச் சிறப்பான ஓர் இடமுண்டு. தமிழகத்தில் முன்னின்றுழைத்த உ.வே. சாமிநாதஐயருக்கு வழிகாட்டியாக இருந்த பெருமையும் இவரைச் சாரும்.

தொல்காப்பியம், சேனாவரையம் (1868), வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் உரையும்(1881), இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரர் உரையும்(1883), தணிகைப்புராணம்(1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியமும் பேராசிரியமும்(1885), கலித்தொகைப் பதிப்பு முதலியவற்றை இனிதே பதிப்பித்த பதிப்புப் பேராசான் சி.வை.தா. அவர்கள், நிறைய ஏட்டுப் பிரதிகளினையும் தேடித் தொகுத்துப் பதிப்பித்தும் வெளியிட்டார்.(4) ஏட்டுப்பிரதிகளைத் தந்த தமிழன்பர்கள் பற்றிய குறிப்புக்களையும், அவர்களுக்கான நன்றியறிதலையும் தமது பதிப்புரைகளில் பொறித்து வைத்தார்.

தமிழின் தொன்மை தேடும் முயற்சிக்கு சி.வை.தா. பல ஆதாரங்களினை முன்வைத்துள்ளார். ‘திரமிள’ என்ற ஆரியச்சொல் ‘தமிழ்’ எனத் திரிந்ததென்றும், ‘சங்கதமொழி’யே தமிழின் தாய்மொழி என்று மொழிப் பயிற்சியுடைய மேலைத்தேச அறிஞர்கள் தெரிவித்த காலத்தில்: ‘எல்லீஸ்’( கு. று. நுடடளை – 1819 ) போன்றோர், ‘இந்தோ-ஐரோ மொழியிலிருந்து திராவிட மொழிகள் வேறுபட்டுச் செல்கின்றன’ என்ற கருத்தை முன்வைத்தனர். ‘தமிழ்மொழியிலே திராவிடத் தாய்மொழியின் பண்டைய கூறுகள் பல காப்பாற்றப்பட்டிருக்கின்றன.’(5) என்று ‘கால்டுவெல்’ தனது ஒப்பிலக்கண நூலில் கூறியுள்ளார். கால்டுவெல்லின் ஆதாரங்களினை எடுத்து சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் ‘தனக்கிணையில்லாப் பாசை தமிழ்’ என்று நிறுவிக் காட்டினார்.

இவ்வாறு ஈழத்தில் மரபுவழி, நவீன நிறுவனவழி என இருவழிக் கல்வி மூலம் புகழ்பெற்ற சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்பு முயற்சியினைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதிவரை ஈழத்தில் பழந்தமிழ் நூல்கள் பல ஆர்வமுள்ள தமிழறிஞர் பலரால் பதிப்பிக்கப்பட்டன.



ஈ. புத்தாக்க முயற்சிகள்

19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் புதுமையான இலக்கியங்கள் பல தோன்றியுள்ளன. குறிப்பாக: பாடநூல்கள், அகராதி முயற்சிகள், நவீன நாடகங்கள், அறிவியல்சார் அம்சங்;களை உள்ளடக்கிய நூல்கள் போன்றன இவற்றுள் அடங்கும். இக்காலத்தில் கல்விப்பணிகள் நிறுவன மயப்படுத்தப் பட்டன. பாடசாலைகளுக்கென ‘பாடத்திட்ட வரைபு’ அறிமுகமானது. பாடநூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. பாரம்பரியமாக நிலவிவந்த மொழி, இலக்கண, சமயக் கல்வியுடன் இணைந்த நிலையில் நவீன அறிவியல் சார் கல்வியும் போதிக்கப்பட்டது. அறநூல்களுடன் வசன நூல்களும் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப் பட்டன.

ஆறுமுக நாவலர் திருத்தமாகவும் செம்மையாகவும் வயதுக்கேற்ற முறையிலும் பாலர் பாடங்களை வெளியிட்டு கல்வியியற் சிந்தனையில் சிறந்த தரத்தினைப்பெற வழிசெய்தார். 1849இல் அமெரிக்க மிசநெறிமார் ‘பாலகணிதம்’ என்ற நூலை வெளியிட்டனர்.(6)

அச்சியந்திர விருத்தியானது ‘அகராதி’களின் புதுமையான தோற்றத்துக்கு வழிபுரிந்தது. தமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என மூன்று விதமான அகராதிகள் தோன்றின. “மானிப்பாய் அகராதி, தமிழ்ச் சொல்லகராதி, தமிழ்ப் பேரகராதி, இலக்கியச் சொல்லகராதி, சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழகராதி”(7) முதலிய தமிழ் அகராதிகளும், உவிஞ்சிலோ, பேர்சிவல் பாதிரிகள் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும் இக்காலப் பிரிவில் தோன்றின.

விசுவநாத பிள்ளை அவர்களின் தமிழ்-ஆங்கில அகராதி 1870இல் வெளிவந்ததைத் தொடர்ந்து கதிரவேற்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை முதலியோர் இணைந்து ‘கதிரவேற்பிள்ளை அகராதி’யை வெளியிட்டனர். பின்னர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்கள் ‘இலக்கியச் சொல்லகராதி’ ஒன்றினை வெளியிட்டார்.(8)

பேர்சிவல் பாதிரியாரின் தொகுப்பு நூலான ‘பழமொழி அகராதி’யும் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் ‘அபிதானகோசம்’ என்ற கலைக் களஞ்சியமும் வல்வை ச.வைத்திலிங்கம் பிள்ளையின் ‘சிந்தாமணி நிகண்டு’ம் இசை நாடகங்களும், விலாசங்களும் 19ஆம் நூற்றாண்டை அலங்கரித்தன. நாவலரின் தந்தையான ‘கந்தப்பிள்ளை’ பல நாடக நூல்களை எழுதினார் எனினும் அவற்றில் ஒன்றுதானும் இன்று கிடைத்தில. ஊசோன் பாலந்தை கதை, மோகனாங்கி, அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் போன்றனவும் இக்காலக் கதைநூல்களே. அமெரிக்க நாட்டவரான ‘டாக்டர்.கிறீன்’ அவர்களின் பங்களிப்பு ஈழத்து மருத்துவத் துறையில் காத்திரமான ஓர் இடத்தினைப் பெறுகின்றது. 1850இல் ‘ர்ரஅயn யுயெவழஅல’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்த இவர் மானிப்பாயில் தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வைத்தியப் பணி புரிந்தார். ‘மருத்துவ அறிவியலின் தந்தை’ என ஈழத்தவரால் புகழப்பட்ட இவர் ‘உடற்கூற்று உளநலத் துறை’ என்ற நூலை மொழிபெயர்த்துத் தந்தார்.(9) இவருடைய வழியைப் பின்பற்றி தரமான நூல்களைத் தந்த பேராசிரியர்.வைத்திய கலாநிதி.அ.சின்னத்தம்பி அவர்களும் இவ்விடத்தில் பாராட்டப்பட வேண்டியவரே.



உ. மொழிபெயர்ப்பும் ஆய்வு முயற்சியும்

‘19ஆம் நூற்றாண்டினை ஈழத்துக்கே உரியது.’ என்று கூறும் வகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் சிறப்பான முறையில் நடைபெற்றன. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு அரிச்சந்திர நாடகம், யாழ்ப்பாண வைபவமாலை, சிவஞானபோதம், சிவப்பிரகாசம், திருக்கோவையார், பகவத்கீதை, தாயுமானவர் பாடல்கள் போன்ற பல நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன. முத்துக்குமார சுவாமி, பிறிற்றோ போன்றோர் மொழிபெயர்ப்புத் துறையில் முன்னின்றுழைத்தனர்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நாவலரால் ‘பைபிள்’ மொழிபெயர்க்கப் பட்டமை மகத்தான பணியாகும். அதன்பின் டாக்டர் கிறீன், கறோல் விசுவநாதபிள்ளை, தி;.த.சரவணமுத்துப்பிள்ளை போன்றோர் பல நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்குப் புதுமெருகூட்டினர்.

இவ்வாறு 19ஆம் நூற்றாண்டிலேயே ஆய்வுப் பணிகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் இடம் பெற்றிருப்பினும், இருபதாம் நூற்றாண்டில் பேராசான் க.கைலாசபதியின்(1933-1982) வரவுடன்தான் அவற்றில் பன்முக வளர்ச்சியினை அவதானிக்க முடிகின்றதெனலாம்.

கருத்துகள்

  1. மிகவும் அருமையான கட்டுரை தொடரட்டும் உங்கள் பணி இது போல் இன்னும் தரமான கட்டுரைகளை தாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்