ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 05 )

ஆ . புலம் பெயர்வும் அதன் விளைவுகளும்

போர் நெருக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில் பல இளைஞர்கள் பணம் தேடியும், பாதுகாப்புத் தேடியும் உலகின் பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். புலம்பெயர் சூழலானது பல புதிய அனுபவங்களினை, அனுபவ வெளிப்பாடுகளினை ஈழத்தவருக்கு ஏற்படுத்தியது. குடியுரிமை பெறுவதில் உள்ள சிக்கல், புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழப் புலமபெயர்வாளர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் புலம் பெயர்வினால் ஈழத்துச் சமூக அமைப்பில் உருவான புதுப்பணக்காரரின் நிலை, புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்களுடைய மனைவியர் படும் தனிமை நிறைந்த சுமையான வாழ்வியற் கோலம், ஆகியவற்றினை ஒருமுகப்பார்வையில் சிறுகதைகளினு}டே எடுத்துக்காட்டும் போக்கினையும் காணமுடிகின்றது.

பிறந்த மண்ணிலே மன நிறைவுடன் வாழ முடியாத பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றனர். இத்தகைய சூழலில் வெளிநாடுகளுக்குச் சென்ற இவர்களுக்கு தமது தாய் மண்ணின் பிரிவுத் துயர் – ஏக்கம் , தஞ்சமடைந்த நாட்டின் கலாசாரம் , என்பன பெரும் தாக்கத்தினை உண்டு பண்ணின. தாம் தாய்நாட்டில் வாழ்ந்த சூழலை எண்ணி மனமுருகிக் கொண்டனர்.

தனது சொந்த மண்ணிலே உயிரினைக் காப்பாற்ற முடியாத பலர், உயிரைக் காப்பாற்ற வெளிநாடுகளுக்கு பயந்து ஓடிய சூழலை, இந்திய இராணுவ சூழலில் தாம் பட்ட அவலங்களினை, எவ்விதமான பயமோ புற அழுத்தங்களோ இன்றிப் புலம்பெயர் நாடுகளில் இருந்தபடி சிறுகதைகளின் மூலம் எமது மனக்கண்முன் நிறுத்தினர்.

புலம்பெயர்வு காரணமாக புதுப்பண வரவு ஏற்பட்டது. இதனால் புதுப்பணக்காரர்கள் பலர் உருவாகினார்கள். அன்பும், தியாகமும் நிறைந்த ஈழத்துச் சமுதாய முறையானது அந்நிய விருந்தாளி போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 1983இன் பின்னர் வெளிநாடு சென்றவர்களில் அதிகமானோர் உடல் வலுவுள்ள கூலித் தொழிலாளர்களாக இருந்தமையினால் அவர்களின் உழைப்பானது உறவுகளை வந்தடைந்த போது உழைப்பின் கஸ்ரம் புரியாத இவர்கள் கேடில் விழுச்செல்வமான கல்வியைவிட பணமே பெரிதெனக் கருதியதனால் திறந்த பொருளாதார நுகர்விழுமியங்களில் நாட்டம் கொண்டனர். இத்தகைய நிலையில் இது ஈழத்து குறிப்பாக, யாழ்ப்பாண நிலவுடைமைச் சமூகத்தைப் பொறுத்த வரையில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

யாழ்ப்பாண மக்களைப் பொறுத்த வரையில் தேசவழமைச் சட்டமானது சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்டே அமைந்து காணப்படுகின்றது. இவ்வேளையில் கூட்டுச் சொத்தாக இருந்த காணிகள் பல தனியுடைமை ஆக்கப்பட்டு குடிசைகள் பல மாடிகளாக உயர்ந்து வேலிகள் அனைத்தும் மதில்;களாக மாறிய சூழலில் பல ஏழைக் குடும்பங்களினை இவர்கள் (ஏளனமாக) பார்த்துக் கிண்டல் செய்தனர்;. ஒரு சிலர் வலிந்து சண்டைக்கிழுத்து தாமே ஊரின் ‘தலைக்கடாய்கள்’ என்பது போல நடந்து கொண்டனர். வரும் பிரச்சினைகளை எல்லாம் தமது பணபலத்தினால் அடக்கிக் கொண்டனர். இத்தகைய புதுப்பண வரவின் செயற்பாடுகளினை, விளைவுகளினை அக்காலக் கதைகள் கூறிநிற்கின்றன.

புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் குடியுரிமை பெறுவதற்குப் படும் சிரமங்களினையும் அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளினையும் பல எழுத்தாளர்கள் கதைகளின் கருவாக்கினர். அதேபோல நாட்டுச் சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்த ஒருவன் தான் தன்னுடைய ஊரிலே முன்பு காதலித்த ஓர் பெண்ணை மறந்து தான் வாழும் நாட்டில் ‘குடியுரிமை’ பெறுவதற்காக ஓர் வெள்ளைக்காரியைத் திருமணம் செய்யும் நிலையையும், திருமணம் செய்து குடியுரிமை பெற்ற பின் அவளைப் பிரிய முடியாமல் தவிப்பதனையும், மெய் மறந்து குடிப் பழக்கத்தில் மூழ்கி, இருவருமாக குடித்துக் கூத்தடிப்பதையும் சிலர் தமது சிறுகதைகளின் கருவாக்கினர்.

உழைப்பினைக் குறிக்கோளாகக் கொண்டும்; இராணுவ கைதுகள் , இளைஞர் மீதான கெடுபிடிகள் ஆகியவற்றின் மத்தியில் வாழமுடியாமை கருதியும் இளைஞர்களும், திருமணமான குடும்ப ஆண்களும் பெற்றோர் – உறவினர் – மனைவி - பிள்ளைகளினைப் பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிட துணையிழந்து தனிமையில் வாடும் குடும்பங்கள், இதனால் அயலவர்களின் உதவியுடன் வாழவேண்டிய நிற்பந்தம் ஏற்படுவதாகவும் இதனால் சொல்லமுடியாத பல சிக்கல்கள் உருவாகுவதாகவும் பல சிறுகதைகள் விவரிக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தமது உறவுகளினைப் பிரிந்து தனிமையில் வாடுவதனையும் , புலம்பெயர் சூழலில் இருந்தபடியே தமது தாய்நாட்டின் மீது கொண்ட பற்றுணர்வினையும் இனஉணர்வினையும் வெளிப்படுத்தும் பாங்கினை இக்காலக் கதைகளின் மூலம் உணர முடிகின்றது.

தாம் குடியேறிய நாடுகளில் ஈழத்து இளம் வாலிபர்கள் எண்ணக் கனவுகளினைச் சுமந்தபடி மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்துகொண்டிருக்கின்றனர். இதேவேளையில் 1983இன் பின்னர் போரின் தாக்கமானது ஒரு பகுதி இளைஞர்களினை உலகெங்கும் அகதிகளாக்கியதுடன் இன்னும் பலரை, பல இலட்சம் பேரை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைய விட்டமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.


இ . அன்றாட போர்க்கால நிகழ்வுகளின் சித்திரிப்பு

இராணுவ அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் அன்றாட நிகழ்வுகளாகி விட்ட செல்லடி, சுற்றிவளைப்பு , காரணமற்ற கைதுகள், காணாமற்போதல், வீதித் தடைகள், அகதி வாழ்க்கை, சித்திரவதைகள், அடையாள அட்டைக் கெடுபிடி ஆகியவற்றையும் இராணுவ நடவடிக்கையினால் சிதையுண்டு போன தேசத்தையும் போரின் வடுக்களையும் கருவாகக் கொண்டும் கதைகளினைப் படைத்துள்ளனர்.

1983 இல் ஏற்பட்ட கலவரத்தினைப் பயன்படுத்தி அகதியாக வெளிநாடு சென்ற மகன் அங்கு ஓர் அகதி முகாமில் தங்கி இருக்க பெற்றவர்கள் போரின் கொடூரம் காரணமாக உள்நாட்டு அகதி முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதனால் கடிதத்தொடர்பு கூடக் கொள்ள முடியாத மிகவும் இக்கட்டான தொடர்பாடல் நிலையினை எண்ணி மகன் ஏங்குவது போலவும் சிறுகதைகள் அமைந்து விளங்குவதனைக் காணமுடிகின்றது.

1988, 1989 காலப்பகுதிகளில் இந்திய அமைதிப் படையினரின் மேலாண்மைச் சூழலில் இளைஞர்கள் பலர், பாடசாலை மாணவர்கள் உட்படப் பலர் திடீரென காணாமல் போயினர். பலர் இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இன்னும் பலர் முரண்பட்ட பல இயக்கங்களினால் கட்டாய இராணுவ சேவையிலும் ஈடுபடுத்தப் பட்டனர். அவ்வாறானதொரு சூழ்நிலையில் பெற்றோர் படும் அவலம் நிறைந்த வாழ்வின் பதிவாகவும் பல சிறுகதைகள் அமைந்தன.


ஈ . சமூகப் பிறழ்வு பற்றிய பார்வை

1983 கலவரத்தினை வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்ட பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட உழைப்பில்லாமல் பலர் உடல் வளர்த்துக் கெட்டுப் போயினர். சமூகத்தில் ஆடம்பரம் , நவநாகரிகம் என்ற போர்வையில் புதுமை விரும்பிகளாக , தம்மை அடையாளங் காட்டிக் கொண்ட பலர் , எமது பண்பாட்டு, விழுமியம் , நெறிமுறை ஆகியவற்றில் நின்று வழிதவறி (ஒதுக்கி விட்டு) ‘இரண்டுங் கெட்டான்’ என வாழ்ந்து கட்டுக்கடங்காதவர்கள் என்ற பட்டம் பெற்று அலைந்தனர்.

ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் கலாசாரச் சீரழிவின் காரணகர்த்தாக்களாக இனங்காணப் பட்டனர். இதற்கிடையில் ‘தீவிரவாதப் பெண்ணியம;’ தலைதூக்கிய போது பெண்களும் சமூகச் சிறையினை உடைத்து கலாசாரக் கட்டுப்பாடுகளினை மீறிச் சுதந்திரப் பறவைகளாகத் தங்களைப் பிரகடனம் செய்தனர். எனினும் பெண்கள் சமூகக் கட்டுக்கோப்பில் நின்று ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் நிலைதடுமாறிய செய்தியினையும் அக்கால இலக்கியங்கள் பதிவு செய்தன.


உ . சாதாரண சம்பவச் சித்திரிப்பு

1985இன் பின்னைய ஒரு தசாப்த காலத்தில் எழுந்த சிறுகதைகளில் உறவுநிலை , பாசப் பிணைப்பு , குடும்ப ஐக்கியம் , வேலைத்தள அனுபவம், பொது நோக்க முற்போக்குச் சிந்தனை ஆகிய தளங்கள் விரிந்துள்ளமையினையும் அவதானிக்க முடிகின்றது.

இக்காலத்தில் காதல் சார்ந்த விடயங்களினையும், சாதிச் சிக்கல்களினையும், உலக நடப்புக்களினையும் விவரிக்கும் சிறுகதைகள் இடையிடையே எடுத்துக் காட்டினாலும் அவை பற்றிய ஆழமான பார்வையினை அல்லது தூரநோக்குச் சிந்தனையினை வெளிப்படுத்திய சிறுகதைகள் எவற்றினையும் இனங்காணமுடியவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டியுள்ளது.

ஒட்டு மொத்தமாக நோக்கினால் பத்தாண்டு காலச்(1985-1995) சிறுகதைகளில் போரின் விளைவுகளினை, போர்க்கால நிகழ்வுகளினை பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டி, அவற்றுள் எம்மையும் ஒருவகையில் உள்வாங்கிய வகையில் இக்காலத்து எழுத்தாளர்கள் சிறுகதை உலகில் தமக்கான இடத்தினைத் தக்க வைத்துள்ளனர் எனலாம்.

தொடரும் ...

கருத்துகள்

  1. /அவர்களின் உழைப்பானது உறவுகளை வந்தடைந்த போது உழைப்பின் கஸ்ரம் புரியாத இவர்கள் கேடில் விழுச்செல்வமான கல்வியைவிட பணமே பெரிதெனக் கருதியதனால் திறந்த பொருளாதார நுகர்விழுமியங்களில் நாட்டம் கொண்டனர். /

    இந்த நிலமைக்கு இதுவும் ஒரு காரணம்.

    உங்கள் அலசல் திடமாக இருக்கிறது. ஓரிரு எழுத்தாளர்களைச் சுட்ட முடியுமா? தேடிப் படிக்க உதவுமே?

    பதிலளிநீக்கு
  2. //1983 கலவரத்தினை வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்ட பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட உழைப்பில்லாமல் பலர் உடல் வளர்த்துக் கெட்டுப் போயினர். சமூகத்தில் ஆடம்பரம் , நவநாகரிகம் என்ற போர்வையில் புதுமை விரும்பிகளாக , தம்மை அடையாளங் காட்டிக் கொண்ட பலர் , எமது பண்பாட்டு, விழுமியம் , நெறிமுறை ஆகியவற்றில் நின்று வழிதவறி (ஒதுக்கி விட்டு) ‘இரண்டுங் கெட்டான்’ என வாழ்ந்து கட்டுக்கடங்காதவர்கள் என்ற பட்டம் பெற்று அலைந்தனர்.//

    வீரியமுள்ள வரிகள்....

    வானம்பாடி அவர்கள் குறிப்பிட்டது போல சில எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடலாமே?


    -கேயார்

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஆய்வு...

    தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //

    வானம்பாடிகள் கூறியது...
    /அவர்களின் உழைப்பானது உறவுகளை வந்தடைந்த போது உழைப்பின் கஸ்ரம் புரியாத இவர்கள் கேடில் விழுச்செல்வமான கல்வியைவிட பணமே பெரிதெனக் கருதியதனால் திறந்த பொருளாதார நுகர்விழுமியங்களில் நாட்டம் கொண்டனர். /

    இந்த நிலமைக்கு இதுவும் ஒரு காரணம்.

    உங்கள் அலசல் திடமாக இருக்கிறது. ஓரிரு எழுத்தாளர்களைச் சுட்ட முடியுமா? தேடிப் படிக்க உதவுமே?

    November 10, 2009 8:57 PM

    //

    நன்றி வானம்பாடிகள்,

    நான் முன்னர் குறிப்பிட்டதுபோல் எழுத்தாளர்களின் பெயர்களைச் சுட்டப்போய் அது வெறும் பட்டியல் படுத்தலாக நின்றுவிடுமோ என்ற அச்சம் என்னுள் எழுகின்றது. இருந்தாலும் ஒருசிலரின் பெயர்களை பின்னர் தனியாக பதிவிட முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //

    இன்றைய கவிதை கூறியது...
    //1983 கலவரத்தினை வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்ட பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட உழைப்பில்லாமல் பலர் உடல் வளர்த்துக் கெட்டுப் போயினர். சமூகத்தில் ஆடம்பரம் , நவநாகரிகம் என்ற போர்வையில் புதுமை விரும்பிகளாக , தம்மை அடையாளங் காட்டிக் கொண்ட பலர் , எமது பண்பாட்டு, விழுமியம் , நெறிமுறை ஆகியவற்றில் நின்று வழிதவறி (ஒதுக்கி விட்டு) ‘இரண்டுங் கெட்டான்’ என வாழ்ந்து கட்டுக்கடங்காதவர்கள் என்ற பட்டம் பெற்று அலைந்தனர்.//

    வீரியமுள்ள வரிகள்....

    வானம்பாடி அவர்கள் குறிப்பிட்டது போல சில எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடலாமே?


    -கேயார்

    November 10, 2009 10:07 PM

    //

    நன்றி இன்றைய கவிதை

    உங்களுக்கும் வானம்பாடி அவர்களுக்கு கூறிய அதே பதிலைத்தான் சொல்லவேண்டியுள்ளது.

    முடிந்தவரை விரைவில் சிலரின் பட்டியலை தனியான பதிவாகத் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. //

    சுசி கூறியது...
    அருமையான ஆய்வு...

    தொடர வாழ்த்துக்கள்.

    November 10, 2009 10:15 PM

    //

    நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  7. //1983 இல் ஏற்பட்ட கலவரத்தினைப் பயன்படுத்தி அகதியாக வெளிநாடு சென்ற மகன் அங்கு ஓர் அகதி முகாமில் தங்கி இருக்க பெற்றவர்கள் போரின் கொடூரம் காரணமாக உள்நாட்டு அகதி முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதனால் கடிதத்தொடர்பு கூடக் கொள்ள முடியாத மிகவும் இக்கட்டான தொடர்பாடல் நிலையினை எண்ணி மகன் ஏங்குவது போலவும் சிறுகதைகள் அமைந்து விளங்குவதனைக் காணமுடிகின்றது.//

    பழைய தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு..."கருநீல மலைமேலே தாய் இருந்தாள்...காஷ்மீரப் பணி மலையில் மகன் இருந்தான்...வரவேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்..." பாடலை நினைவூட்டின.

    பதிலளிநீக்கு
  8. //
    ஸ்ரீராம். கூறியது...
    //1983 இல் ஏற்பட்ட கலவரத்தினைப் பயன்படுத்தி அகதியாக வெளிநாடு சென்ற மகன் அங்கு ஓர் அகதி முகாமில் தங்கி இருக்க பெற்றவர்கள் போரின் கொடூரம் காரணமாக உள்நாட்டு அகதி முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதனால் கடிதத்தொடர்பு கூடக் கொள்ள முடியாத மிகவும் இக்கட்டான தொடர்பாடல் நிலையினை எண்ணி மகன் ஏங்குவது போலவும் சிறுகதைகள் அமைந்து விளங்குவதனைக் காணமுடிகின்றது.//

    பழைய தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு..."கருநீல மலைமேலே தாய் இருந்தாள்...காஷ்மீரப் பணி மலையில் மகன் இருந்தான்...வரவேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்..." பாடலை நினைவூட்டின.

    November 11, 2009 6:41 AM


    ///



    நல்ல பாடல்களை எல்லாம் தேடிப்பிடித்துச் சொல்கிறீர்கள்.
    உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. //எனினும் பெண்கள் சமூகக் கட்டுக்கோப்பில் நின்று ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் நிலைதடுமாறிய செய்தியினையும் அக்கால இலக்கியங்கள் பதிவு செய்தன. //

    என் சொல்ல.........பெண்ணின் நிலை....

    பதிலளிநீக்கு
  10. //

    புலவன் புலிகேசி கூறியது...
    //எனினும் பெண்கள் சமூகக் கட்டுக்கோப்பில் நின்று ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் நிலைதடுமாறிய செய்தியினையும் அக்கால இலக்கியங்கள் பதிவு செய்தன. //

    என் சொல்ல.........பெண்ணின் நிலை....

    November 11, 2009 9:56 AM

    //


    உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி